Home இந்தியா பிரிண்ட் எடிஷனை நிறுத்துகிறது பிரபல டி.என்.ஏ., இதழ்! செய்திகள் இனி முழுமையாக டிஜிட்டலுக்கு மாற்றம்!

பிரிண்ட் எடிஷனை நிறுத்துகிறது பிரபல டி.என்.ஏ., இதழ்! செய்திகள் இனி முழுமையாக டிஜிட்டலுக்கு மாற்றம்!

பிரபல டி.என்.ஏ., செய்தித் தாள் தனது கடைசி பிரிண்ட் எடிஷனை மூடுகிறது. இனி தனது இதழ்கள் அனைத்தும் டிஜிட்டலாகவே வரும் என்று கூறியுள்ளது.

டிஎன்ஏ., பத்திரிகையை வெளிக் கொண்டு வரும் ஜீ குழுமம், தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தள்ளாட்டத்தில் இருக்கும் அது, தனது அச்சு செய்தித் தாளான டெய்லி நியூஸ் & அனாலிசிஸ் (டி.என்.ஏ) பத்திரிகையின் கடைசிப் பதிப்பை, வியாழக்கிழமை முதல் நிறுத்தப் போவதாக, புதன்கிழமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாறிவரும் வாசகர் விருப்பங்களை நிறைவு செய்யும் விதத்தில், அச்சு நாளிதழை நிறுத்திவிட்டு, டிஜிட்டலில் தொடரப் போவதாக அது கூறியுள்ளது.

முன்னதாக டெல்லி மற்றும் பிற மையங்களில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த 14 வருட பழைமையான இந்த செய்தித்தாளின் கடைசிப் பதிப்பு வியாழக்கிழமை நாளை மும்பை மற்றும் அகமதாபாத்தில் இருந்து வெளிவரும்.

இந்தக் குழுமத்தின் சுபாஷ் சந்திரா குடும்பம் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகிறது! வணிக சவால்கள் இந்தக் குழுமத்துக்கு மிகவும் மோசமாகிவிட்டன! நிதி நெருக்கடி, அதன் கடன்கள் மீது மேலும் சூழ்நிலையை கடினமாக்கியது. இக்குழுமம், தங்கள் பங்குகளை விற்று 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் கடன்களை திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து, ரூ. 6,500 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்திய பின்னரும், கடன் வழங்கியவர்களுக்கு இந்தக் குழுமம் இன்னும் ரூ.7,000 கோடி கடன்பட்டுள்ளது.

“வேகமாக வளர்ந்து வரும் செய்திச் சந்தையில், அச்சு மற்றும் டிஜிட்டலுக்கு இடையில் மிக மெல்லிய வேறுபாடு உள்ளது. அச்சு மற்றும் டிஜிட்டல் வாசகர்கள் இரட்டிப்பாகியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், அச்சில் படிப்பதை விட தங்கள் மொபைல்களில் படிக்க விரும்புகிறார்கள் என்பதை மாறி வரும் போக்கு காட்டுகிறது. ஊடகத் தளம் மட்டுமே மாறுகிறது, நாங்கள் அல்ல!”என்று ஆசிரியரின் தலையங்கப் பக்க குறிப்பு கூறுகிறது.

டி.என்.ஏ டிஜிட்டலாக மாற்றி, “புதிய மற்றும் சவாலான கட்டத்தில் வாசகரின் ஆதரவைக் கோருவதாக அது கூறியுள்ளது.

டி.என்.ஏ ஜூலை 2005 இல் மும்பையில் இருந்து தொடங்கியது, பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத் தாழ்வுக்கு மத்தியில் அதிகரித்து வரும் விளம்பரச் செலவுகள் நிதி மூலதனத்தில் பல புதியவர்களின் நுழைவுக்கு வழிவகுத்தன. இது ஒரு வெப்-போர்ட்டலாக தொடரும் என்றும், விரைவில் மொபைல் பயன்பாட்டை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது! வீடியோ அடிப்படையிலான ஒரிஜினல் உள்ளடக்கத்தை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாம்.

நீண்ட கால சந்தாக்களை செலுத்திய வாசகர்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

டி.என்.ஏ., இந்த 2019 ஆம் ஆண்டில் மூடப்படும் மூன்றாவது பத்திரிகை ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெக்கான் குரோனிக்கிள் குழுமத்திற்குச் சொந்தமான பைனான்சியல் க்ரோனிகல் மூடப்பட்டு அதன் ஆங்கில மூலப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. முகேஷ் அம்பானி ஜனவரி மாதத்தில் ஃபர்ஸ்ட்போஸ்ட் இதழை அச்சிட இந்த துறையில் கால் பதித்தார். ஆனால், நுழைந்த ஆறே மாதங்களுக்குள் மூடிவிட்டார் .

இதே போல், மும்பையின் நகர் இதழான ஆஃப்டர்நோன் டெஸ்ட்பாட்ச் அண்ட் கொரியர் இதழும் இந்த வருட தொடக்கத்தில் மூடப் பட்டது. இவை மாறி வரும் வாசகர் மனோபாவத்தைக் காட்டுவதாகவும், எதிர்கால வாசகரின் விருப்பத்துக்கு ஏற்ப டிஜிட்டலுக்கு மாற்றம் காண்பது சிறந்தது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

எல்லாம் டிஜிட்டல் மயம்… பிரிண்ட் இனி மாயம்! என்ற நிலையை எட்டி வரும் சூழலில், அரசு ஆன்லைன் ஊடகத்துக்கு ஒரு வரைமுறையைக் கொண்டு வர வேண்டிய காலம் இது என்று குறிப்பிடலாம்.

அச்சு ஊடகங்களுக்கு வைத்த கட்டுப்பாடுகள், அரசு சலுகைகளைப் போல்… உரிமம், கட்டுப்பாடு, பொறுப்புத் திணிப்பு, சலுகைகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் அரசு கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்! செய்தால், செய்தி ஊடகம் ஆன்லைனிலும் பொறுப்பு உணர்ந்து சரியான தகவல்களைச் சென்று சேர்க்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version