Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!

தினசரி ஒரு வேத வாக்கியம்:
1. நீண்ட ஆயுள்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஆயுஷ்மான் ஜீவ மா ம்ருதா:” – அதர்வண வேதம் 
“நீண்ட ஆயுளோடு வாழ்வாயாக! மரணமடையாதே!”

நம் புராதன கலாச்சாரத்தில் வேத இலக்கியம் வாழ்வின் மதிப்பை எடுத்துக் கூறுகிறது. “இந்த உடலும் வாழ்வும் பயனற்றது” போன்ற உபயோகமற்ற வைராக்கியம் நம் புராதன நூல்களில் தென்படாது.

வாழ்க்கையை ரசமயமாகச் செய்து  கொள்! பயனுள்ளவனாக வாழ்! என்று கூறும் வழிமுறைகள் வேத கலாச்சாரத்தில் வெளிப்படுகிறது.

வேதத்திலிருந்து கிடைக்கும்  தார்மீக வாழ்வியல் முறையும், நடத்துவிக்கும் சாஸ்திர விதிகளும் இவ்வுலக வாழ்க்கையின் சக்தியை உணர்ந்து  வாழப் பயன்படும் வழிவகைகளே!

புலன்கள் புஷ்டியாகவும் மனம் வலிமையாகவும் நற்குணங்களோடும் நல்ல  ஆசைகளோடும் வாழ்வதே யோகம்.

“ஸத்கர்ம ஸம்யக் ஞானம் பஸ்யேம சரதஸ்ஸதம்…
நந்தாம சரதஸ்ஸதம்… ஸ்ருணவாம… ப்ரபவாம…” – பார்த்து, மகிழ்ந்து, கேட்டு, பேசி ஹாய்யாக நூறாண்டு வாழும்படி வேதம் சுப ஆசிகளை வழங்குகிறது.

ஒவ்வொரு கணமும் சைதன்ய உயிர்ப்போடு வாழும் வாழ்க்கை முறை நமக்கு சொந்தமானால் தீர்காயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழும் யோகம் நமக்குக் கிட்டும்.

செல்வத்தை விட, பதவியை விட சைதன்ய சீலத்தோடு கூடிய வாழ்க்கை முறை உயர்ந்தது. அதனை இழந்துவிட்டு பெறக்கூடிய உயர்ந்த பலன் வேறெதுவுமில்லை.

“ஏதி ஜீவந்தமானந்தோ நரம் வர்ஷ சதாதபி”- என்று சீதாதேவி அனுமனிடம் கூறுகிறாள்.

“மனிதன் உயிரோடு இருந்தால் நூறாண்டுகளிலாவது மகிழ்ச்சியைப் பெறுவான்”. 

மனித வாழ்வின் மதிப்புபை உணர்த்தும் சிறந்த கூற்று இது. இந்த நம்பிக்கையோடு கூடிய சிந்தனை, மதிப்பு மிகுந்த வாழ்க்கையை அளிக்கக்கூடியது. வாழ்க்கையின் விழுமியத்தை உணர்த்தக் கூடியது.

இகத்திலும் பரத்திலும் பரமார்தத்திலும்  எதை சாதிக்க வேண்டுமென்றாலும் உயிர் வாழ்க்கை வேண்டும். மனிதன் உயிரோடு உடலில் வாழ வேண்டும். அதனால் தர்மத்தைப்  பேணும்  கருவிகளில் முதலாவது மனித உடலே. உடலைப் பெற்றிருப்பது  போகத்திற்காக அல்ல… யோக சாதனைக்காக!

அர்த்தமற்ற பரபரப்பு மிகுந்த வாழ்க்கை ஓட்டத்தில் எதனை, எதற்காகச் செய்கிறோம் என்ற புரிதல் அற்ற நிலையில் மனித சமுதாயம் உள்ளது. நம்மில் மறைந்துள்ள தெய்வீக ஆனந்தத்தை அனுபவத்தில் பெரும் சிறந்த சாதனையோடு கூடிய வாழ்க்கையை எடுத்துரைக்கின்றன நம் சாஸ்திரங்கள்.

‘நாம்’ இருந்தால்தான் ‘நமக்கென்று’ ஏதோ ஒன்றை முயன்று சாதித்து அடைய முடியும். 

தீர்க காலம்  நன்றாக  உயிர்வாழும் சாதனைமயமான வாழ்க்கையை நம் தினசரி வாழ்க்கை முறையில் அமைத்துக் கொடுத்த நம் புராதன தர்ம நூல்களின் கருத்துக்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கூறி விளக்க வேண்டும். இல்லாவிட்டால் அமானுஷ்யமான வேடிக்கை சாதனங்களோடும் இணையவெளி செயலிகளோடும் நேரத்தைக் கடத்தி வாழ்வின் இனிமையை இழந்து விடும் அபாயம் உள்ளது.

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version