15. தர்மத்தோடு கூடிய காமம்
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“த்வம் காம ஸஹஸாபி ப்ரதிஷ்டிதோ விபு:”
– அதர்வண வேதம்
“பரமேஸ்வரா! நீ காம சொரூபமாக நிறுவப்பட்ட கடவுள்!”
காமம் என்றால் கோரிக்கை. ஆன்மீகமான பாரத தேசத்தில் காமம் போன்ற உலகியல் அம்சங்களை அலட்சியப்படுத்தியதாக நினைக்கிறோம்.
ஆனால் நம் தேசத்தில் இந்த விஷயம் குறித்து அற்புதமான சாஸ்திரங்கள் பிறந்ததுள்ளன. ஆனால் வியாபாரத்திற்காக விஷம் நிரம்பிய தம் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பிய வெளிநாட்டுப் பார்வையை நம் கண்களுக்குள் கடன் வாங்கிக் கொண்டு விட்டோம். அற்புதமான நம் புராதன கருத்துக்களை மிகத் தாழ்வான கண்ணோட்டத்தோடு பார்த்து ஏளனம் செய்கிறோம்.
புராதன பாரத தேசத்தில் காமத்தை பகவானின் எண்ணமாக ஏற்கும்படி புருஷார்த்தங்களில் ஒன்றாக நிறுவியுள்ளார்கள். மகாபாரதத்தில் ‘காம கீதங்கள்’ கூறப்பட்டுள்ளன. அதாவது காமத்தின் மீது தார்மீக பார்வையோடு கூடிய தத்துவ சிந்தனை பாரத தேசத்தின் புராதன காலத்திலேயே இருந்துள்ளது.
வாத்ஸாயனர் போன்றோரின் நூல்களைத் தெளிவாக ஆராய்ந்தால் ஓர் ஆரோக்கியமான குடும்ப அமைப்புக்குத் தேவையான அடிப்படைகளை எவ்வாறு நிறுவியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தர்மம் என்னும் அடித்தளத்தின் மீது அர்த்தம், காமம் இவற்றைப் பெறுவது என்னும் அடிப்படையான சமுதாயக் கொள்கையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய கலாச்சாரம் நம்முடையது.
“தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப” – “தர்மத்திற்கு விரோதமற்ற காமம் என் சொரூபம்” என்று சாட்சாத் பகவான் கீதையில் போதிக்கிறான்.
சகஜமான சுபாவத்தை சரியான வழியில் நடத்திச் சென்றால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் என்று உணர்ந்து தர்ம எல்லைகளை பாத்தியாகக் கட்டி மானுட வாழ்க்கை என்னும் விருக்ஷத்தை வலுவாக வளர செய்த உறுதியான கலாச்சாரம் பாரத பூமியின் பண்டைய கொள்கையாக இருந்தது.
“பரமாத்மயே ஸ அகாமயத – ஏகோஹம் பஹூஸ்யாம் ப்ரஜாயா யேதி” என்ற கோரிக்கையோடு ஏகமாக இருந்த பரமேஸ்வரன் அனேகமாக ஆனார். அதனால்தான் அவர் காமேஸ்வரனாக போற்றப்படுகிறார். அவருடைய
சக்தியே காமேஸ்வரி. உலகில் ஒவ்வொரு அணுவிலும் அந்த சக்தியின் ஒளியே மறைந்துள்ளது. இந்த அற்புதமான தரிசனம் இங்கு உபாசனை சம்பிரதாயத்தில் ஒளியோடு விளங்குகிறது.
உலகியல் காமங்களை தர்மத்தோடு இணைத்து இயற்கை மார்க்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தபடியே அந்தர்முகமாக இறைவன் மீதான பக்தியும், வேதாந்த வித்யையும் ஒளிவீசும் மோட்ச சாம்ராஜ்யத்தை (நிவ்ருதி மார்க்கம்) வெளிப்படுத்தும் உபாசனை இந்த பாரத பூமியில் செழித்து விளங்கியது.
உண்மையில் ஒரே சக்தி மூன்றாகப் பணிபுரிகிறது. அந்த ஒரே சக்தி காம சக்தி. எழுத்துகளின் அமைப்பும் கூட காரணத்தோடு இணைந்த ஒரு சூட்சும விஞ்ஞானத்தை கடைபிடித்தது நம் சாஸ்திரம். ‘காம’ என்ற நாமத்தில் மூன்று சக்திகள் உள்ளன என்று விவரித்தன.
காம = க+அ+ம. இதில் ‘க’ பிரம்மாவை குறிக்கிறது. ‘அ’ என்பது விஷ்ணுவைக் குறிக்கிறது. ‘ம’ என்பது ருத்ர ஸ்வரூபம். இம்மூன்றும் படைத்தல் காத்தல் லயித்தல் சக்திகள். இம்மூன்று சக்திகளுக்கும் மூலசக்தி காமம். அதனால்தான் பரமேஸ்வரனை ‘காம’ என்று போற்றி வழிபடுகிறோம்.
கடவுளை எத்தனை பவித்திரமாக தர்மத்தோடு வழிபடுவோமோ காமத்தைக் கூட அத்தனை அழகாக நியமங்களோடு கடைபிடித்தால் அது நம்மை அழிய விடாமல் பாதுகாக்கும்.