Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 23 .திவ்ய மங்கள ரூபம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 23 .திவ்ய மங்கள ரூபம்!

veda vakyam

23 .திவ்ய மங்கள ரூபம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“யத்தே ரூபம் கல்யாணதமம்” – ஈசாவாஸ்ய உபநிஷத்.

“உன் வடிவம் மிகவும் மங்களகரமானது!”

நாம ரூபங்களோடு வெளிப்படும் பகவானை இந்த உபநிடத மந்திரம் துதிக்கிறது. கடவுளின் நாமமும் ரூபமும் பக்தர்களை அருளுவதற்காக ஏற்பட்டவை. அதனால் அவை மிகுந்த மங்களகரமானவை. அந்த நாமத்தை நினைத்தாலும் அந்த ரூபத்தை தியானித்தால் சுபம் விளையும்.

“நாம்னாமகாரி பஹுதா நிஜசர்வசக்தி: தத்ரார்பிதா” என்பது சைதன்ய மகாபிரபுவின் கூற்று. – “பகவான்! நீ பல பெயர்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றில் உன் சகல சக்திகளையும் நிறைத்துள்ளாய்”.

ஈஸ்வர சக்தி நிரம்பியிருப்பதால் பகவானின் நாமங்கள் அனைத்தும் மந்திரங்களாயின. மனனம் செய்பவர்களைக் காப்பது மந்திரம். அதனால் நாமமே மந்திரம். நாமத்தின் சக்தியை பிரகடனம் செய்வதே ரூபம். 

தத்துவத்தை வெளியிட்டால் அது  வடிவம். பகவான் தன் அனந்த கல்யாண குணங்களையும் தன் ரூபத்தின் வழியே பிரகடனம் செய்கிறான். இந்த அர்த்தத்தில் ரூபம் என்ற சொல்லுக்கு வடிவம் என்று அல்லாமல் லீலை என்றுகூட பொருள் கொள்ளலாம். கடவுளின் செயல்களே லீலைகள். அவை நம் சுபத்திற்காகவே தவிர கடவுளின் நன்மைக்காக அல்ல.

“தயா நஸ்தனுவா ஸந்தமயா கிரிசந்த!
யாதே ருத்ர தனூரகோரா பாப௨காசினீ!!” ஆகிய ருத்ர மந்திரங்கள் பரமேஸ்வரனின் வடிவத்தை ‘சந்தமம்’ (மிகுந்த சுபம், சுகம், சாந்தி), ‘அகோர’ (ப்ரசாந்தம்), ‘அபாபகாசினீ’ (குறைகளற்றதும் ஞானத்தை அருளக்கூடியதும்) என்ற மூன்று பெயரடைகளால் தெரிவிக்கிறது. சிவன், கேசவன் மற்றும் தெய்வ ரூபங்கள் அனைத்தும் இந்த குணங்களோடு கூடியவையே. 

பகவானின் வடிவங்களனைத்தும் நாம் கற்பனை செய்து வடிவமைத்தவை அல்ல. ருஷிகள் தவத்தில் தரிசித்தவை. அவர்களுடையது தரிசனம். நமக்கு தியானம். அவர்களுடையது விஞ்ஞானம். நமக்கு விசுவாசம். அவர்கள் தரிசித்து வர்ணித்தவையே  தியான ஸ்லோகங்களாக நமக்குக் கிடைக்கின்றன.

ஒருமுனைப்போடு கடவுளின் ரூபத்தை இதயத்தில் நினைப்பவர்களுக்கு இறைவனின் சைதன்யம் அவர்களின் பிராண சக்தியில் நிறைந்து எப்போதும் சுபங்களையே அருளுகிறது. இதில் சந்தேகமில்லை.

இறைவனின் ரூபத்தை நம்மில் இருத்துவது நாமஸ்மரணை. ஒரு நாமத்தைக் கூறியவுடனே ஒரு ரூபம் ஸ்புரிக்கிறது. இரண்டும் மங்களகரமானவையே. இந்த நாம, ரூப வித்யை, விக்ரகங்களாகவும் கீர்த்தனைகளாகவும் ஸ்தோத்திரங்களாகவும் நமக்கு கிடைக்கின்றன.

நாமஜபம், ஸ்தோத்திர படனம் இவற்றால் கடவுளின் சொரூபம் தெளிவாக வெளிப்பட்டு சாதகனின் இகம்,பரம் இரண்டிலும் வெற்றிக்கு காரணமாகிறது.

பகவான் எடுத்த நரசிம்மர், வாமனர், ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகள் பஞ்சபௌதிக ரூபத்தில் தென்பட்டாலும் அவை ‘அப்ராக்ருத திவ்ய உடல்கள்’. இயற்கை (ப்ராக்ருத) விகாரங்கள் அற்றவை.

“சர்வே நித்யா:  சாஸ்வதாஸ்ச தேஹாஸ்தஸ்ய பராத்மன: !
ஹானோபாதானரஹிதா: நைவப்ரக்ருதிஜா: க்வசித் !!

சர்வை: சர்வகுணை: பூர்ணா: சர்வாவகுணைவர்ஜிதா: !பரமானந்த சந்தோஹா: ஞானமாத்ராஸ்ச கேவலா: !!”
– என்பது சிவ புராண வசனம். 

andal krishnar artist veda article

பரமாத்மாவின் சாகார, சகுண வடிவங்கள் எல்லாம் நித்தியங்கள். சாஸ்வதமானவை.குறையோ அழிவோ அற்றவை. இயற்கைக்கு வசமாகாது. இயற்கையை வசப்படுத்தக் கூடியவை.

“ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்ம மாயயா…” – பகவத்கீதை.

“சகல நற்குணங்களும் கொண்டவை. துளியும் தீயகுணங்கள் அற்றவை. சகல மங்களங்களும் நிறைந்த சம்பூர்ணமானவை. அவை சின்மய மூர்த்திகள். பூரண ஆனந்தம் நிரம்பியவை”.

திவ்ய மங்கள விக்கிரகம்,  ஸச்சிதானந்த விக்ரஹம் என்ற சொற்கள் தெய்வ வடிவங்களை உத்தேசித்து கூறப்படுவதன் பொருள் இதுவே. வேதம் கூறும் ‘கல்யாணதமம்‘ என்ற சொல் இத்தனை அழகான கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.

“சந்துரு வர்ணுனி அந்தசந்தமுல ஹ்ருதயாரவிந்தமுல ஜூசி ப்ரஹ்மானந்தமனுபவிஞ்சுவாரு எந்தரோ மஹானுபாவுலு” – என்று கீர்த்தனை செய்த தியாகராஜர், 
“நீ சொகசு, நீ தினுசு, நீ மனசு வேறு… லாவண்ய ராமா!” என்று பகவானின் ரூபங்கள் பஞ்சபௌதிக சக்திகளுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

அந்த சௌந்தர்யம் பிரபஞ்ச விகாரங்கள் ஒட்டாதது. “ஜன்ம கர்மசமே திவ்யம்” (4-9) என்பது கிருஷ்ண பரமாத்மாவின் கூற்று.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version