17வது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப் பட்டு, முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி அமைந்துள்ளது. இதற்கு முன் வாக்குக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள், முந்தைய கருத்துக் கணிப்புகள், யார் வெற்றி பெறுவார் என்ற ஜோதிட கணிப்புகள் என பல்வேறு தகவல்கள் உலா வந்தன.
வாக்குக் கருத்துக் கணிப்புகளை மீறி அதிக இடங்களில் வென்றிருக்கிறது பாஜக., அதே நேரம், தலைவர்களின் எதிர்காலம் குறித்தும் இது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், எந்தக் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளுடன் பொருந்திப் போயிருக்கின்றது என்று பலர் ஆராய்ந்து வருகிறார்கள். அது போல், எந்த ஜோதிடர் கூறிய கணிப்புகள் அப்படியே பலித்திருக்கிறது என்றும் சிலர் ஆராய்ந்து வருகிறார்கள்.
கடந்த 9.4.18 அன்று தினமலர் நாளிதழில் ஜோதிடர் பரணிதரன் எழுதிய பலன்கள் துல்லியமாக, இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள். இது க்ற்
நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது, அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்க உள்ள நிலையில் உள்ள கிரக அமைப்புகளை வைத்து இப்பலனை எழுதியுள்ளேன்,
அன்றைய கிரக நிலை… தனுசில் சந்திரன், சனி, கேது. மேஷத்தில் சுக்கிரன், ரிஷபத்தில் சூரியன்,புதன். மிதுனம் லக்னம், மிதுனத்தில் செவ்வாய், ராகு. விருச்சிகத்தில் குரு வக்கிரம்.
பிரதமர்.மோடி…
ஜென்மத்தில் குரு வக்கிரம், குடும்பத்தில் சந்திரன்,கேது,சனி,சப்தமத்தில் சூரியன், புதன்,அஷ்டமத்தில் செவ்வாய், ராகு என்ற நிலையில் தேர்தல் முடிவுகளை சந்திக்க இருக்கிறார்.
ராசிக்கு பத்திற்கும், பதினொன்றுக்கும் அதிபதியான சூரியனும் புதனும் ஏழில் ஒன்றாக அமர்ந்து புதாதிபத்தியம் பெறுவதால் மீண்டும் இவரே பிரதமராவர்! முன் ராசிக்குரிய பலனை வழங்கிடக்கூடிய வக்கிர குரு, சுகம், சத்ரு, அஷ்டம ஸ்தானங்களை பார்ப்பதால், இவர் எதிரிகளை வென்று ஆட்சியைக் கை பற்றுவார்! வாக்கு எண்ணிக்கை மிதுன லக்கினத்தில் தொடங்குவதால், மிதுனத்திற்கு பத்தாம் அதிபதியாக குருவின் வீடு மீனம் இருப்பதால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும். தேர்தல் காலத்தில் கடும் எதிர்ப்புகள் இருப்பது போல் தோற்றமளித்தாலும், தேர்தல் முடிவுகள் இவருக்கு சாதகமாகவே இருக்கும்.
ராகுல் காந்தி:
ராசியாதிபதி ஏழில், அவருடன் சனி, கேது என்று கிரகங்கள் இணைந்திருப்பதும், ராசிக்குள் ராகுவும் செவ்வாயும் இணைவு பெற்றிருப்பதும், விரயஸ்தானத்தில் ஆட்சி கிரகமான சூரியன் சஞ்சரிப்பதும் இவருக்கு பாதகமான நிலையாகும்.
தேர்தல் முடிவு இவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, செல்வாக்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தும், கட்சிக்குள்ளும் தலைமையை எதிர்த்து பூசல் ஆரம்பமாகும். மாநில கட்சிகளால் இவருடைய அரசியல் பயணத்திற்கு முற்றுப் புள்ளி உண்டாகும்.
முதல்வர்.எடப்பாடி:
ராசி நாதன் லாப ஸ்தானத்தில், அவருடன் ராசியாதிபதி சனி, கேது, இணைவு, முன்னிருந்த ராசியின் பலனைத் தரும் வக்கிர குரு பாக்கியஸ்தானத்திற்குரிய பலனை வழங்கிடக் கூடிய நிலையில் இருப்பதும், கேந்திரத்தில் சூரியனும் புதனும் இணைந்திருப்பதும் தேர்தல் முடிவு வெளிவரும் நேரம் இவருக்கு யோகமான நேரமாகவே இருக்கிறது. தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுவது போல் தோன்றினாலும் தேர்தல் முடிவு இவருக்கு சாதகமாகவே இருக்கும். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இவருடைய கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொள்வார்! தொடர்ந்து முதல்வராக நீடிப்பார், கட்சிக்குள்ளும் இவருடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
மு.க.ஸ்டாலின்:
ராசியாதிபதியும், லாபாதிபதியும் பத்தில் இணைந்திருப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருப்பதும் நன்மையாகும். என்றாலும் ஐந்தில் சந்திரன்,சனி,கேது சேர்க்கையும், வக்கிர குரு மூன்றாம் இடத்திற்குரிய பலனை வழங்குவார் என்பதாலும், எதிர்ப்பார்த்த ஒன்றை எட்ட முடியாமல் போகும்! தேர்தல் முடிவுகள் இவருக்கு சாதகமும் இல்லாமல் பாதகமும் இல்லாத நிலையை உண்டாக்கும்! இவருடைய கூட்டணி கட்சி தோல்வியையே சந்திக்கும் என்பதால் தேர்தல் முடிவுகள் இவருக்கு விழலுக்கு இறைத்த நீராக மாறி விடும்!
டி.டி.வி.தினகரன்:
சந்திரன், சனி, கேது மூன்றில் இருப்பது மிகப் பெரிய பலவானாக இவரை காட்டும், இவருக்குப் பின்னால் இருப்பவர்களும் நம்பிக்கையுடன் செயல் படுவார்கள்,ஆனால், லாபாதிபதி எட்டில் மறைந்திருப்பது இவருடைய வெற்றியை மறைத்து விடும்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் அச்சத்தை உண்டாக்கும் வகையில் இவருடைய பணிகள் இருந்தாலும் தேர்தல் முடிவுகள் இவருக்கு எதிராகவே இருக்கும். இவருடன் இருப்பவர்கள் மீண்டும் தாய்க் கட்சியை நோக்கிச் செல்லக் கூடிய நிலையை தேர்தல் முடிவுகள் உண்டாக்கும்.
கமலஹாசன்:
இவருடைய ராசிக்கு பத்தில் சனி, கேது, ராசி நாதன் இருப்பதும், ராசியாதிபதி வக்கிரமடைந்திருப்பதும் தேர்தல் முடிவுகள் இவருக்கு படிப்பினையை உண்டாக்கும்! அரசியல் மீது இவர் கொண்டுள்ள ஈடுபாட்டினை இத்தேர்தல் யோசிக்க வைத்துவிடும்! இக்காலம் எதார்த்த உலகைப் பற்றி இவர் தெரிந்து கொள்ளக் கூடிய காலமாக இருக்கும்! தேர்தல் முடிவுகள் அரசியல் மீதே இவருக்கு வெறுப்பை உண்டாக்கும்.