அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார். இருநாட்டின் உள் விவகாரம் குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேசியதாகக் கூறப் படுகிறது.
அமெரிக்க இந்திய இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளதாகவும், ஒரு சில தலைவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியதாகவும் தகவல் வெளியானது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, திங்கள் கிழமை இன்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசி வாயிலாக பேசினார். ஆசிய விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் பேசியதாகக் கூறப் படுகிறது.
முக்கியமாக காஷ்மீர் பிரச்னையில் இந்திய நிலைப்பாடையும், வெளிநாடு மேற்கொள்ளும் மோசமான பிரசாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மோடி தனது பேச்சில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுகிறது. ஆசிய பிராந்தியத்தில் சில தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார்கள், இந்தியாவிற்கு எதிராக மிகக் கடுமையாக, அவர்கள் வன்முறையை தூண்டி விட பார்க்கிறார்கள். இது எங்கள் பிராந்திய அமைதிக்கு ஏற்றது அல்ல.
இரண்டு நாட்டு வர்த்தகம் தொடர்பாக விரைவில் நாம் ஆலோசிக்க வேண்டும். வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் ஒப்பந்தங்களை நாம் விரைவில் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி தனது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், ஆப்கானிஸ்தான் தனது 100வது சுதந்திர நாளைக் கொண்டாடும் இன்று, அந்நாட்டுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவும், அந்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இந்தியாவின் சார்பில் மேற்கொள்ளப் படும் திட்டங்களும், உதவிகளும் குறித்து மோடி டிரம்பிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அண்டை நாடான சீனா மட்டுமே வழக்கம் போல் ஆதரவாக இருந்துவருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் குறித்தே இனி பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவோம் என்று இந்தியா தெளிவாக்கியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு சீனாவுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. காரணம் இந்திய நிலப் பகுதியை குரங்கு அப்பம் பிய்த்து தின்ற கதையாக, சீனாவும் லடாக் பகுதியில் கபளீகரம் செய்து அக்சாய் சீன் என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பார்வை பதிந்துள்ளதால், அடுத்து சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தையும் சர்வ தேச அளவில் இந்தியா பேசக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாரதப் பிரதமர் மோடி இடையிலான இந்த உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு இதன் மூலம் இந்தியா மேலும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.