ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டணத்தில் மேற்கொண்ட சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. ஹைதராபாத்தில் அஞ்சல் அலுவலகத்தின் உயரதிகாரியான கே.சுதீர்பாபு என்பவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்து டிச. 23 வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. இந்நிலையில் அவரது உறவினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில், புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட நிதின், நரசிம்ம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக ரூ.2.95 கோடி ரூபாய்க்கு கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுகளை சுதீர் பாபு மாற்றியதாகக் கூறப்படுகிறது.