ஒரு குடும்பத்தின் `பொறுப்பற்ற நடத்தை’ காரணமாகத் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் கொரோனா பரவியது. பிப்ரவரி 29 அன்று 55 வயது நபர், அவரின் 53 வயது மனைவி மற்றும் அவர்களின் 26 வயது மகன் ஆகியோர் இத்தாலியின் வெனிஸிலிருந்து கத்தார், தோஹா வழியாகக் கொச்சிக்குத் திரும்பியுள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடத்தில் உரிய தகவல் சொல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த பிறகு, பக்கத்தில் உள்ள தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மேலும், வீட்டிலேயே இருக்காமல், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ஊர் சுற்றுவது என இருக்க அவர்களால் இரண்டு முதியவர்கள் உட்பட பலர் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்களது பயணத்தை மறைத்த குடும்பத்தால் இப்போது கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 22 பேர் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் குடும்பம் பயணித்த அதே விமானத்தில் கத்தார் டு கொச்சி வந்த இன்னொரு இளைஞருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், அந்த இளைஞரும் இவர்களைப்போல பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
திருச்சூரை அடுத்த கொடுங்கல்லூரைச் சேர்ந்த அந்த 21 வயது இளைஞர் 29-ம் தேதி கத்தாரில் இருந்து கொச்சி வந்துள்ளார். இவரும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
கொச்சியிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்தவர், மற்ற நாள்களில் அங்கிருந்த மாலுக்குச் சென்றுள்ளார். அதேபோல் சினிமாவுக்கும் சென்றுள்ளார்.
மேலும், ஊரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து திரும்பியவர்கள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும். 20 நாள்களுக்கு மேல் வீட்டைவிட்டு செல்லக் கூடாது என்ற அறிவுரையை மாநில அரசு வழங்கியிருப்பதை அறிந்தும், அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக அந்த இளைஞர் இதுபோன்று ஊர் சுற்றியுள்ளார்.
பின்னர், மார்ச் 5-ம் தேதி தொண்டை வலி என்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார். இதற்கிடையே, பத்தினம்திட்டா குடும்பத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்களுடன் பயணம் செய்த நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டும்போது மார்ச் 8-ம் தேதி இந்த இளைஞரை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அதில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞரின் பொறுப்பற்ற செயலால் இவரின் உறவினரின் எட்டு மாத குழந்தைக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அந்தக் குழந்தை தாயுடன் சிகிச்சை பெற்று வருகிறது. இதே போல் இவருக்கு தொண்டை வலிக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுதொடர்பாகப் பேசியுள்ள திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷா நவாஸ், சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தை தாய், சகோதரி ஆகியோரைத் தனிமை வார்டில் வைத்து மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த இளைஞருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட 355 பேரின் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் இதுபோன்று சிலர் அலட்சியமாக இருப்பதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.