பெங்களூரில் இருக்கும் பிரபல மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் வெளி மாவட்ட மக்கள் பேருந்துக்காக குவிந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் இருக்கும் பிரபல மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் வெளி மாவட்ட மக்கள் பேருந்துக்காக குவிந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இரவு முழுக்க பேருந்து கிடைக்காமல் அங்கு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பல மாநிலங்களில் நேற்று சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.
கர்நாடகாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் கூட மாநிலத்திற்கு உள்ளே பேருந்துகள் இயங்கி வருகிறது. இதற்காக 600 சிறப்பு பேருந்துகளை மாநிலத்திற்கு உள்ளே மட்டும் அரசு இயங்கி வருகிறது. ரெட் சோன் பகுதிகளில் மிக குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்குகிறது. 55 பேர் பயணிக்க கூடிய ஒரு பேருந்தில் மொத்தம் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி விட வேண்டும் என்பதற்காக இப்படி மிக குறைவான எண்ணிக்கையில் பயணிகள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்கியும் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். இதனால் பேருந்து கட்டணத்தை கர்நாடக மாநில அரசு இரட்டிப்பாக உயர்த்தி உத்தரவு வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
500 ரூபாய் டிக்கெட் என்றால் 1000 ரூபாய் என்று விலை உயர்த்தப்பட்டது. இதனால் நேற்று தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பெங்களூரில் இருக்கும் பிரபல மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு வந்தவர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போதிய காசு இல்லாமல் இவர்கள் பேருந்து நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் போதிய பணம் இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள் மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
பெங்களூரில் ஆந்திராவை சேர்ந்த பணியாளர்கள் பலர் பணியாற்றுகிறார்கள். மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா எல்லை வரை பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருந்து பின் ஆந்திராவில் இருக்கும் சொந்த ஊருக்கு நடந்தே எல்லையை கடந்து செல்லலாம் என்று இவர்கள் திட்டமிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். இப்படி ஆயிரக்கணக்கில் இவர்கள் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால் திடீர் என்று பேருந்து டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.
அது மட்டுமின்றி, இந்த டிக்கெட் விலை உயர்வு காரணமாக நேற்று பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அரசின் இந்த முடிவை காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. போராட்டத்தில் குதிப்போம் என்றும் இவர்கள் அறிவித்தனர். இதன் குழப்பம் காரணமாக நேற்று இரவோடு இரவாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. நேற்று 10 மணிக்கு பின் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்த எல்லோரும் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் நேற்று மெஜிஸ்டிக் பேருந்து நிலையத்தில் தங்கினார்கள். நிறைய பேர் இருந்ததால் சமூக இடைவெளி விட முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுக்க அருகருகே அமர்ந்தபடி எல்லோரும் தூங்கும் பரிதாபம் ஏற்பட்டது. இப்போதும் அங்கு பேருந்து கிடைக்காமல் கடுமையாக அவதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அரசின் மோசமான திட்டம் மற்றும் அறிவிப்பு காரணமாக இப்போதும் அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து உள்ளனர். தங்கள் சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கே தங்கி உள்ளனர். ஏற்கனவே கொரோனாவை தடுக்க கர்நாடகா போதிய டெஸ்ட்களை எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. அதற்கு ஒரு படி மேலே போய் தற்போது பெங்களூரில் மொத்தமாக சமூக இடைவெளி காற்றில் பறந்துள்ளது.