குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் இம்மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிச. 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வியாழக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, வாக்குக் கணிப்பு முடிவுகள் மாலையில் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் சரியான முடிவுகளை கணித்து வெளியிட்டுள்ள நியூஸ் 24 ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியின் வாக்குக் கணிப்பில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களில் வெற்றி பெறும்; அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வாக்குக் கணிப்பில் குஜராத்தில் பாஜக 99 முதல் 113 இடங்களிலும், காங்கிரஸ் 68 முதல் 82 இடங்களிலும், பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.
“குஜராத்தில் பாஜகவுக்கு 113 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 66 தொகுதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும். மற்ற கட்சிகள் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது’ என்று டைம்ஸ் நவ் வாக்குக் கணிப்பு உறுதியாகக் கூறியுள்ளது.
ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 64 தொகுதிகள் வரையே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பாஜக 117 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-விஎம்ஆர் எடுத்துள்ள கணிப்பில் மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 16, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு 24, காங்கிரஸுக்கு 30, வடக்கு குஜராத்தில் பாஜகவுக்கு 30, காங்கிரஸுக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
குஜராத்தில் ரிபப்ளிக் டி.வி- சி-வோட்டர்ஸ் நடத்திய கணிப்பில், பாஜகவுக்கு 108, காங்கிரஸுக்கு 74 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “குஜராத் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு எப்போதும் உண்டு என்பது வாக்குக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த அரசியலால் மக்கள் குழப்பம் அடையவில்லை’ என்றார்.
குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.