ராஞ்சி: லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவுக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் கோலி என்கிற ரஹிபுல் ஹசன். இவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்த தாரா சஹதேவ் என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை 2014ல் தாம் ஒரு முஸ்லிம் என்று கூறாமல் மறைத்து, ஹிந்து பெயரில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அதன் பின்னர் அவர், தனது மனைவி தாராவை முஸ்லிமாக மதம் மாறும்படி நெருக்கடி கொடுத்தார். இந்தப் பின்னணி குறித்து அறிந்து அதிர்ந்த தாரா, 2014 ஆகஸ்ட் 19ல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டது. இதை அடுத்து ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹிபுல் ஹசன் தில்லியில் வைத்து ஆகஸ்ட் 26ம் தேதி கைது செய்யப் பட்டார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டில், லவ் ஜிஹாத் என்பது அடித்தளமாக இருந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
பின்னர் தனக்கு விவாகரத்து கோரி, 2017 ம் ஆண்டில் ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தில் தாரா சஹதேவ் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.கே. கௌதம், தாரா அவரது கணவரால் அடித்து துன்புறுத்தப் பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என்றும், அவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறி அவருக்கு விவாகரத்து வழங்கினார்.