திருவனந்தபுரம்: கேரளத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது; அவர்களது செயல்பாடுகளால் அவர்கள் வரலாற்றின் பக்கங்களில் படுகேவலமான நிலைக்குச் சென்றுவிட்டார்கள் என்று சாபமிட்டார்.
செவ்வாய்க்கிழமை இன்று ஒரிஸாவை அடுத்து, கேரளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை 66ன் சுற்றுச்சாலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை 66ன் 13 கி.மீ. நீள கொல்லம் பைபாஸ் சாலையைத் திறந்து வைத்துப் பேசியபோது,
சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு கையாண்ட விதம், அவர்களை வரலாற்றில் மிக மோசமான அரசு என்று காட்டியுள்ளது. ஒரு மாநில நிர்வாகத்தின் படுகேவலமான நடத்தையாகவே சபரிமலை விவகாரம் அமைந்துள்ளது.
இடதுசாரிகள் இந்திய கலாசாரம், பண்பாடு, ஆன்மீகத்தை மதிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தளவு வெறுப்பு வைத்திருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் யுடிஎஃப் படு மோசம். காங்கிரஸ் ஒன்றும் சிறந்ததல்ல.
காங்கிரஸ் பலவிதமான நிலைப்பாடுகளை கொண்டது. அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றைக் கூறுவார்கள். பத்தனந்திட்டாவில் வேறொன்றைக் கூறுவார்கள். அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. அக்கட்சியால், தங்களது நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்க முடியுமா?
எங்களது நிலைப்பாடு தெளிவானது. எங்களின் நடவடிக்கைகளும், வார்த்தைகளும் ஒன்றாகவே இருக்கும். அது மக்களுக்கு எப்போதும் ஆதரவாகவே இருக்கும்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கு பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால், இளைஞர்களின் சக்தி, ஏழைகளை புறக்கணிப்பது, மக்களை ஏமாற்றுவது இவை எல்லாவற்றிலும் அவர்கள் செயல்பாடு ஒன்றே ஒன்று தான்!
இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்! பெயரளவில் வேறுபாடு இருந்தாலும், ஊழல், ஜாதி, மதவாதத்தில் அவற்றின் செயல்பாடு ஒன்றுதான். கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதிலும், அரசியல் வன்முறையில் ஈடுபடுவதிலும் இரு கட்சிகளும் ஒன்றுதான் என்று காட்டமாகப் பேசினார் பிரதமர் மோடி.
மேலும், இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் பாலினம் மற்றும் சமூக நீதி குறித்து மிகப் பெரும் வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக இருக்கும்! முத்தலாக் முறையை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிரயத்தனப் படுகிறது. ஆனால், கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும் தான் இதனை எதிர்க்கின்றனர் என்று கூறிய மோடி, முத்தலாக் முறைக்கான தடை என்பது, பெண்களுக்கான சமூக நீதி என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஒவ்வொரு இந்தியனுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பேசினார் மோடி.
கேரளத்தில் சபரிமலையில் எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் ஆளும் இடதுசாரியின் செயல்பாடுகளுக்கு எதிராக, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட கைகலப்பு வன்முறைகளால் கேரளம் அமைதியின்மையில் தவித்து வருகிறது. கேரள கம்யூனிஸ்ட் குண்டர்களால் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப் படுவதும், அப்பாவி இந்துக்களின் வீடுகளில் புகுந்து தாக்கி, அவர்களின் மத நெறிமுறைகளை அழித்து, பூஜை அறைகளை அடித்து உடைத்து வருவதுமான காட்டுமிராண்டித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.