மே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் மே 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்து வைக்கிறார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவால் பெரும் மனநிம்மதி அடைந்தவர் குடியரசுத் தலைவர் என்று செய்திகள் வெளியாயின. காரணம், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போது, ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய விதம், தேர்தக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறிக் கொண்டிருந்தன.
இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டத்தின் வழியில் நடப்பது என்பது குறித்த ஆவணங்களை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்துக் கொண்டிருந்தாராம். மேலும், பிரச்னை ஏற்படும் என்று இருந்தால், அந்த நேரத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் படித்துக் கொண்டிருந்தாராம்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி காலையே, குடியரசுத் தலைவருக்கு மன நிம்மதி ஏற்பட்டதாகவும் தனக்கு சிக்கல் எதுவும் ஏற்படாமல் அதிக வேலையின்றி மக்கள் தீர்ப்பு அமைந்துவிட்டது என்றும் நிம்மதி அடைந்ததாகவும் கூறப் படுகிறது.
இந்நிலையில் வரும் மே 30 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. கடந்த மே 23 வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 30 வியாழன் அன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.
The President will administer the oath of office and secrecy to the Prime Minister and other members of the Union Council of Ministers at 7 pm on May 30, 2019, at Rashrapati Bhavan
— President of India (@rashtrapatibhvn) May 26, 2019