ஆந்திராவில் பழைய நினைப்பில் டிஎஸ்பி.,க்கு சல்யூட் வைத்தார் எம்பி.,ஆகிவிட்ட இன்ஸ்பெக்டர். அதே நேரம், எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்தார் டிஎஸ்பி! இந்த சுவாரஸ்ய படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் கதிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் கொரந்தலா மாதவ். கடந்த ஆண்டு இவரது எல்லைக்கு உட்பட்ட ததிபாத்ரி பகுதியில் வன்முறை ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தை அடக்க முடியாமல் போலீசார் அங்கிருந்து ஓடிவிட்டனர் என்று, அப்போதைய அனந்தபூர் தொகுதி எம்.பி. திவாகர் ரெட்டி குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையினரை தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
அப்போது களத்தில் பணியில் இருந்தார் மாதவ்! ‘போலீசை பற்றி எம்.பி.க்களோ, எம்.எல்.ஏ.க்களோ வாய்க்கு வந்தபடி பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். காவல் துறையை கேவலப்படுத்துபவர்களின் நாக்கை அறுப்பேன்” என்றார்.
ஒரு காவல் ஆய்வாளரின் இது போன்ற பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு திவாகர் ரெட்டியும் ஆவேசமாக பதில் அளித்தார். உனது காக்கி சட்டையை கழற்றி வைத்து விட்டு வா பார்க்கலாம் என்றார்.
இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதி பொது மக்களிடம் மாதவுக்கு செல்வாக்கு அதிகரித்தது. இதை அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ ஒதுக்கியது.
தேர்தலில் நிற்பதற்காக மாதவ் தனது காவல் ஆய்வாளர் பணியை ராஜினாமா செய்தார். ஆனால் ராஜினாமா ஏற்கப்படாததால் அவரது வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
மாதவ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது அவருக்கு டிஎஸ்பி.,யாக மெகபூப் பாஷா பணியாற்றினார். தற்போது சிஐடி. பிரிவு டிஎஸ்பி.யாக இருக்கும் மெகபூப் பாஷா எம்.பி.ஆகி விட்ட மாதவை யதேச்சையாக சந்தித்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்துக்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து மாதவ் கூறுகையில், நான்தான் முதலில் டிஎஸ்பி.,க்கு ‘சல்யூட்’ அடித்தேன். அவர் பதிலுக்கு சல்யூட் அடித்தார். நான் அவரை மதிக்கிறேன். நாங்கள் இருவரும் பரஸ்பரம் மரியாதை செலுத்திக் கொண்டோம்! இதில் டிஎஸ்பி,. எம்பி., என்றெல்லாம் புரோட்டோகால் எதுவும் பார்க்கவில்லை. அதுவும் தேவையில்லை என்றார்.