திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கோரக்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (66). விவசாயி. இவரின் மனைவி பாக்கியம் (55). இவர்களின் வீட்டில் இன்று அதிகாலை அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏழுமலை வீட்டுக்கு சென்றனர். அங்கு ஏழுமலையும் பாக்கியமும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏழுமலையின் மகள்களுக்கும் பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர்.
ஏழுமலை, பாக்கியம் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் கூறுகையில், “ஏழுமலை, பாக்கியத்துக்கு மூன்று மகள்கள். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகளுக்கும் அவரின் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் கணவரைப்பிரிந்து அவர் வாழ்ந்து வந்தார். இந்தச் சூழலில் ஏழுமலையின் மூன்றாவது மகளுக்கும் அவருக்கு அண்ணன் உறவு முறையான ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.
இவர்கள் இருவரின் பழக்கத்தை ஏழுமலை மற்றும் அவரின் உறவினர்கள் கண்டித்தனர். ஆனால், அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்தச் சூழலில் அந்த இளைஞருடன் ஏழுமலை மகள் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் மனமுடைந்த ஏழுமலை, பாக்கியம் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.
ஏழுமலை, பாக்கியம் சடலங்களைப் பார்த்து அவரின் மகள்களும் உறவினர்களும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.