நடிகர் சிவக்குமாரின் பெரியம்மா மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலுார் நடராஜபுரத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 61. இவர் தனது மகன் அகிலேஷ், உடன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். இன்று மாலை காரில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அகிலேஷ் ஓட்டி வந்தார். ராமசாமி தேவர் வீதி அருகே வந்த போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் காரில் மோதுவது போல் சென்றார்.
இதையடுத்து அகிலேஷ் மற்றும் பைக்கில் வந்த நபருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த குமாரசாமியின் உறவினர் குமரேசன், 80 அங்கு வந்தார். மூவருடனும் பைக்கில் வந்த நபர் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த நபர் அருகில் இருந்த வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து குமாரசாமி, குமரேசன் ஆகியோரை வெட்டினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சூலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த சூலுார் போலீசார் பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சூலுார் ராமசாமி தேவர் வீதியை சேர்ந்த சதீஸ்குமார், 26, ஆட்டோ டிரைவர் எனத் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த குமாரசாமி நடிகர் சிவக்குமாரின் பெரியம்மா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.