புதுச்சேரி வில்லியனூர் வி.மணவெளி திரிவேணி நகரில் வசிப்பவர் லோகநாதன். இவரது மனைவி குணவேலிக்கு (44), கடந்த 17ம் தேதி விடியற்காலை மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குணவேலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குணவேலி உடல் கொரோனா பரிசோதனைக்குப்பின், முடிவுக்காக பிணவறையில் வைக்கப்பட்டது. நேற்று காலை பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று இல்லை என்று வந்தது. இதையடுத்து அவரது உடலை வாங்க உறவினர்கள் சென்றபோது பிணவறையில் குணவேலி உடல் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது, நேற்று கொரோனாவால் 3 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 70 வயது பெண்ணுக்கு பதிலாக குணவேலியின் உடல் மாற்றி அனுப்பப்பட்டு, இடுகாட்டில் எரியூட்டப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி உயரதிகாரிகளிடம் குணவேலியின் உறவினர்கள் முறையிட்டனர். ‘கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உறவினர்கள் குணவேலியின் உடலை தவறாக அடையாளம் காட்டியதால், உடல்தகனம் செய்யப்பட்டுள்ளது’ என்று மருத்துவமனை நிர்வாகிகள் குறிப்பிட்டனர். இந்த தகவலை குணவேலி குடும்பத்தினரிடம், கோவிட் மருத்துவ நிர்வாகிகள் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.