பேஸ்புக்கில் காதல் வலை விரித்து இளைஞரிடம் வழக்கமான டெக்னிக்கில் விலை உயர்ந்த பைக் பறித்துக்கொண்டு, பணம் பறித்த திருச்சி காஜாமலையை சேர்ந்த கல்லூரி மாணவி ரகமத் நிஷா உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவரின் காதலன் உள்பட 5 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (30) பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். ஒரு வருடத்துக்கு முன் பேஸ்புக் மூலம் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ரகமத் நிஷா என்பவர் இவருக்கு தோழி ஆனார். பேஸ்புக் மூலமும் வாட்ஸ் அப் மூலமும் அடிக்கடி இருவரும் பேசி வந்துள்ளனர். அப்போது நிஷா அவரை காதலிப்பதாகக் கூறி தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டவர், திடீரென 3 மாதமாக பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் வினோத்குமார் தவியாய்த் தவித்துள்ளார்.
திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன் நிஷாவிடம் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ‘‘நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்… நீ இல்லாமல் நானில்லை… உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’’ என உருகி மெசேஜ் அனுப்பி, அவரது அந்தரங்க போட்டோக்களையும் அனுப்பியுள்ளார்.
பின்னர் மீண்டும் கடந்த 5ஆம் தேதி போன் செய்த நிஷா, உன்னை நான் நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் காதலியை பார்க்க வேண்டும் என்ற சபலத்தில், வினோத்குமார் ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள பைக்கில் திருச்சி வந்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் பகுதிக்கு வந்ததும் நிஷாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது நிஷா அவரிடம் நீ எதில் வந்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு வினோத், தாம் பைக்கில் வந்ததாக கூறி பைக்குடன் செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
பிறகு மீண்டும் போன் செய்து மதுரை ரோட்டில் உள்ள ராணுவ மைதானத்துக்கு வருமாறு நிஷா கூறியுள்ளார். அதன்படி, வினோத்குமார் ராணுவ மைதானம் பகுதிக்குச் சென்று காத்திருந்தாராம். அப்போது அங்கே ஒரு ஆட்டோவில் வந்த 4 பேர், நிஷா அழைத்து வரச் சொன்னதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
வினோத்தின் பைக்கை 2 பேர் பின்னால் ஓட்டி வந்தனர். கன்டோன்மென்ட் வஉசி சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று பைக்கை பறித்துக்கொண்டு வினோத்தை அடித்து உதைத்து, ரூ.1 லட்சம் தந்தால் பைக்கை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் தேறாததாலும், அவ்வளவு பணமில்லை என்ற நிலையில் அவரிடம் இருந்த பொருள்களை பறித்துக் கொண்டு விரட்டியுள்ளனர்.
தான் நன்கு ஏமாற்றப் பட்டதை உணர்ந்த வினோத் குமார், கே.கே.நகர் போலீசில் தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து, போலீஸார் அவரிடம் ரூ. ஒரு லட்சம் ரெடியாக இருக்கிறது, என் பைக்கை திருப்பிக் கொடுங்கள் என்று சம்பந்தப் பட்ட கும்பலிடம் பேசுமாறு கூறி, ஓர் இடத்துக்கு வரச் சொல்லியிருக்கின்றனர்.
அதன்படி, தனிப்படை போலீசார் வினோத்குமாருடன் சென்று, அவர்கள் கூறிய படி, அந்த கும்பல் கே.கே.நகர் பகுதிக்கு வந்தவுடன், நிஷா உட்பட 3 பேரையும் சுற்றி வளைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மூவரும் திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத்நிஷா (20), மதுரை ரோடு வள்ளுவர் நகரை சேர்ந்த ஆசிக் என்ற நிவாஷ் (26), பாலக்கரையைச் சேர்ந்த முகமது யாசர் (22) என்பது தெரிந்தது. ஆசிக் என்ற நிவாஷ் ஐஎன்எல் – இந்திய தேசிய லீக் கட்சி திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்றும் தெரிய வந்தது.
ரகமத் நிஷா கல்லூரி மாணவி. இவர் அன்சாரி என்பவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் கடந்த 3ஆம் தேதி அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. நிஷா, தன் காதலனுடன் சேர்ந்து இளைஞர்களிடம் பேஸ்புக் மூலம் பழகி பணம், பொருட்களை பறித்து வந்துள்ளதாகத் தெரியவந்தது.
அவரது இந்த செயலுக்கு, அஜிஸ், சித்திக், அன்சாரிலால், உசேன் ஆகிய 4 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து நிஷா உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நிஷாவின் காதலன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.