செய்துங்கநல்லூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, மத போதகர் மோகன் சி.லாசரஸ் வாகனத்தில் இருந்து ரூ.1,20,000 ரொக்க பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் உத்தரவின்படி பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு, செலவினங்கள் சரிபார்க்கும் கணக்கு குழு ஆகிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு நிலையான கண்காணிப்புக் குழுவினர் செய்துங்கநல்லூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து வந்த காரை சோதனையிட்டதில் அதில் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் காரில் வந்த நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் மதபோதகர் மோகன்சிலாசரிடம் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நத்தம் நிலவரி திட்ட வட்டாட்சியர் நம்பிராயர் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருமான கோபால கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு கருவூலத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது.