தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஓழுங்கு டிஜிபி-யாக டாக்டர் சி.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #TNPolice
தமிழகக் காவல்துறையின் டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சி.சைலேந்திர பாபு, காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திர பாபு கூறினார்.
2019 மார்ச் முதல் ரயில்வே காவல்துறை டிஜிபி.,யாகப் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். முந்தைய டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு,
காவல்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்பது அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட காவல் துறை தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும்.
மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் நடக்க வேண்டும். இதற்காக போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். போலீசாரின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகை, மீடியா துறையினர் உதவ வேண்டும்.. என்று சைலேந்திரபாபு கூறினார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி.,யாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபுவுக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக., மாநில துணைத் தலைவருமான கே.அண்ணாமலை தமது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக டிஜிபி.,யாகப் பணியாற்றிய திரிபாதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரையும், அவர் மனைவியையும் காரில் அமர வைத்து, அவருடன் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் காரை வடம்பிடித்து நுழைவாயில் வரை இழுத்துச் சென்று வழியனுப்பி வைத்தனர்.
வழக்கமான மரபுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இசைக்குழுவின் இசை முழங்க, காவல்துறையினர் அணிவகுத்து நின்று வழியனுப்பினர்.