தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸார் தாங்களே விநாயகர் சிலையை அருகில் உள்ள நீர் நிலையில் கரைப்பதற்கு எடுத்துச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியான இன்று செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜைகளை மேற்கொண்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என்பதால் இன்று பூஜை செய்த அந்த ஒரு சிலையையும் கரைத்துவிட வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் அந்த சிலையை வழக்கமான விநாயகர் சிலை ஊர்வலப் பாதையில்தான் எடுத்துச் செல்வோம் என்று இந்து முன்னணியின் முருகன் கூறினார்.
ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். விநாயகர் சிலை வைப்பதற்கும் ஊர்வலத்துக்கும் தடை விதித்த ஊராட்சி ஒன்றிய அரசை கண்டிப்பதாக, முருகன் கோஷம் எழுப்பினார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அப்படி என்றால் நீங்களே எடுத்துச் சென்று கரைத்துக் கொள்ளுங்கள் என்று முருகன் கூறியதால், போலீசார் விநாயகர் சிலையை தாங்களே நீர்நிலையில் கரைப்பதற்கு எடுத்துச் சென்றனர்.
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தடைகளை தகர்த்தெறியும் வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், தென்காசி நகர தலைவர் நாராயணன் நகர துணைத்தலைவர் சொர்ண சேகர் நகரச் செயலாளர் மாதேஷ், நகர செயற்குழு உறுப்பினர் காளிமுத்து, ஹிந்து ஆட்டோ முன்னணி தலைவர் கோமதி சங்கர், நகர செயலாளர் நேதாஜி, பிரபா சூர்யா வெற்றிமணி உலகநாதன் கார்த்தி இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கோயிலுக்குப் பின்புறமுள்ள ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்துச் செல்லப் பட்டது.