- Ads -

    ஆர்.எஸ்.எஸ். பிரமச்சாரிகள் குழு குழந்தைகள் பெறுவது குறித்துப் பேச உரிமையில்லை: அக்பருதீன் ஓவைஸி

    Akbaruddin-Owaisiஹைதராபாத்: “பிரம்மச்சாரிகளின் குழுவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களிடம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூற உரிமை இல்லை’ என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் (எம்.ஐ.எம்.) மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைஸி பேசியுள்ளார். அவரது இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதில் திங்கள்கிழமை நேற்று நடைபெற்ற அக்கட்சியின் 52ஆவது ஆண்டு விழாவில் அவர் பேசியபோது, அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபடவேண்டும். அவர்கள் மதவாத அரசியலுக்கு எதிராக தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும். இல்லாவிடில் முஸ்லிம்களின் அடையாளம் அபாயத்துக்கு சென்றுவிடும் என்றார். பாஜக எம்.பி.யான சாக்சி மகராஜ், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பேசியிருந்தார். அவரது பெயரைக் குறிப்பிடாமல், ஓவைஸி இவ்வாறு பேசினார்… ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் திருமணமே செய்து கொள்ளமாட்டார்கள். அது ஒரு பிரமச்சாரிகளின் குழு. அவர்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கமாட்டார்கள். மனைவி, குழந்தைகளால் வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள், 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். 4 குழந்தைகள் என்ன? 12, 14 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள குடிமக்கள் தயாராக இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை அவர்களால் கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் ஓவைஸி. அவரது இந்தக் கருத்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version