பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்று சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், அந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் தங்களது குடும்பச் செலவுக்காக இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்தத் திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்கப் பார்க்கிறது. இதனை ரத்து செய்து ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கப் பார்க்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது. இந்த 7 மாதத்தில் அவர்கள் என்ன சாதித்தார்கள்? காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் செயல்படுத்துகிறது மோடி அரசு. 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டிருக்கிறார் என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், கோபண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.