பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளன.
பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பில், நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் திமுக.,தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் தான் கைது செய்யப் படுவோம் என்ற அச்சம் காரணமாக முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். இது குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்று அரசுத் தரப்பு கூறியது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப் படுவதாக கூறியது.