ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் எடுக்கும் முறை படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆன்லைன் டிக்கெட் நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வராது என்று விளக்கம் அளித்துள்ளார். முதற்கட்டமாக, சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்னர் படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
இதற்காக தமிழக அரசு சார்பில் செயலி உருவாக்கப்படும் என்றும், தியேட்டர்களின் நிலைக்கு ஏற்ப கட்டண விகிதம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்!
இது குறித்து கருத்து தெரிவித்து சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்குகளில் நடக்கும் டிக்கெட் விற்பனை குறித்த தகவல்கள் தங்களுக்கு சரியாக வந்து சேராது என்றும், டிக்கெட் விற்பனை குறித்து பெரிய அளவில் போலியாக உயர்த்திச் சொல்வதை வைத்துதான் பெரிய நடிகர்கள் தங்களுக்கு பெரிய மாஸ் இருப்பதாகக் கூறி சம்பளத்தை ஏற்றி வைத்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
அதேநேரம் அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப் பட்டால், படத்தின் லாப நஷ்ட கணக்கு சரியாக கணிக்கப்படும் என்றும், எனவே அதன் மூலம் நடிகர்களுக்கு உரிய சம்பளமும் நிர்ணயிக்க முடியும் என்றும் கூறுகின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள்.
சினிமா தயாரிப்பாளர்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றாலும், இந்த அறிவிப்பு பெரிய நடிகர்கள் பலரை அதிர வைத்துள்ளது என்கின்றனர் கோடம்பாக்கம் வட்டாரத்தில்! இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் பாதகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் யோசித்து வருகின்றனராம்.