அரசியலில் ஒரு அரைகுறை – ராகுல் காந்தி
— ஆர். வி. ஆர்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்கள் முன்பு டெல்லி ராம் லீலா மைதானத்தில் இப்படிப் பேசினார்: “நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய நினைக்கிறார்.”
ராகுல் மேலும் பேசியது: “இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெல்ல பாஜக கோஷம் போடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், ‘மேட்ச் பிக்சிங்’ செய்யாமல், எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம் தராமல், மீடியாவை விலைக்கு வாங்காமல், அவர்கள் 180 சீட்டுகள் கூட ஜெயிக்க முடியாது. பாஜக-வின் முயற்சிகள் வென்றால், நாட்டின் அரசியல் சட்டம் மாற்றப் படும், மக்களின் உரிமைகள் பறிக்கப் படும். பிறகு எங்கும் தீப்பற்றி எரியும்.”
தான் ஒரு அரைகுறை என்று இப்போதும் காண்பிக்கிறார் ராகுல் காந்தி. அவர் என்ன சொல்ல வருகிறார், பாருங்கள்.
லோக் சபாவுக்குத் தேர்தல் நடக்கும் சீட்டுகள் 543. மத்தியில் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்த பட்சம் 272 சீட்டுகள் வெல்ல வேண்டும். இந்தப் பின்னணியில் ராகுல் காந்தி சொல்ல வருவது: ‘இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 180 சீட்டுகளுக்கு மேல் கிடைத்து அவர்கள் ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியையும் எட்டிவிட்டால், அதற்கு நான்கு காரணங்கள்தான் இருக்க முடியும்.’
முதலாவதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உபயோகிப்பது பாஜக தகிடுதத்தம் செய்வதற்கான வழி, அவர்கள் மோசடியாக 180 சீட்டுகளுக்கு மேல் வெல்வதற்கு அந்த எந்திரங்கள் காரணம் என்று ராகுல் ஆதாரமில்லாமல் பேச வருகிறார். அதோடு, அந்த முறைகேடு நடப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை என்றும் அபாண்டமாகச் சொல்ல வருகிறார் அவர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், லோக் சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் ஒரு நிச்சய அம்சம் என்றாகி விட்டன. அப்படி என்றால் ராகுலின் பேச்சுக்கு என்ன அர்த்தம்?
வருகின்ற லோக் சபா தேர்தலில், அல்லது எந்த சட்டசபைத் தேர்தலிலும், காங்கிரஸ் தோற்றால், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், காகித வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சிதான், எங்கள் கூட்டணிதான், ஜெயித்திருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் சொல்லிக் கொண்டே இருப்பாரா? ஒரு தேர்தல் முடிவில் மக்கள் குரலை மதிக்கத் தெரியாமல், இப்படிப் பொதுவெளியில் வெட்கம் இல்லாமல் பேசும் ஒரு தலைவர் இந்தியாவில் வேறு யார் இருக்கிறார்?
ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ராகுல் காந்தி மாதிரி காங்கிரஸில் ஒரு வாரிசுத் தலைவர். ஆனால் அவரே கூட, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் யாரும் தில்லுமுல்லு செய்ய முடியாது. மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள், அதிக ஓட்டுக்கள் பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்று ஒரு ஒரு வீடியோ பேட்டியில் சொல்லிவிட்டார். இந்த அளவு நேர்மை கூட ராகுல் காந்தியிடம் இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடக்கிறது என்றால், வழக்கமான அமேதியை விட ஏன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் அதிக நம்பிக்கை வைக்கிறார்? வயநாடு தொகுதி எந்திரங்களில் மட்டும் எவரும் மோசடி செய்ய முடியாது, ஆனால் மற்ற தொகுதி எந்திரங்களில் அது சாத்தியம் என்பதாலா? அல்லது, அமேதியில் கிடைக்காத பெரும்பான்மை வாக்குகள் ராகுல் காந்திக்கு நிஜமாகவே வயநாடில் கிடைகின்றன, மற்ற தொகுதிகளைப் போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கேயும் முடிவுகளைச் சரியாகக் காட்டுகின்றன என்பதாலா? ராகுல் காந்தி வயநாடில் ஜெயித்தால், மக்கள் கொடுத்த வெற்றி; பாஜக வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளில் ஜெயித்தால் அங்கு வாக்குப்பதிவு எந்திர மோசடியா?
ராகுல் காந்தி அடுத்துப் பேசியது, ‘மேட்ச் பிக்சிங்’ என்று ஒரு உளறலோ உளறல், ‘மீடியாவை விலைக்கு வாங்குதல்’ என்று ஒரு பேத்தல், ‘எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்’ என்று ஒரு அர்த்தமற்ற கோழைத்தனம்.
ராகுல் காந்தி பேசியது எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. பிறகு என்ன, ‘மீடியாவை விலைக்கு வாங்குவது’?
எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மோடியை எதிர்க்க ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். பிறகு என்ன, ‘எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்’? எந்த ஒரு அரசியல் கட்சியும், தன்னை எதிர்க்கும் மற்ற கட்சியைச் சட்டத்திற்கு உட்பட்டுக் கூடியவரை நெருக்குவதும், பலவீனமாக்குவதும் அரசியலில் நடப்பது, புரிந்துகொள்ளக் கூடியது. இருந்தாலும் மேடை ஏறி மூக்கால் அழுகிறார் ராகுல்.
தனது பேச்சில் இதோடு நிற்கவில்லை ராகுல் காந்தி. பாஜக இந்த லோக் சபா தேர்தலில் ஜெயித்தால், அப்போது அரசியல் சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளைப் பறித்துவிடுமாம் அந்தக் கட்சி. சரி, பாஜக எதற்காக அதைச் செய்யவேண்டும்? அரசியல் சட்டத்தை அப்படி மாற்றாமல் பாஜக தேர்தலில் ஜெயித்து ஏற்கனவே இரண்டு முறை மோடி பிரதமர் ஆனார். இப்போது மூன்றாவது முறையும் பாஜக ஜெயித்து மோடி பிரதமர் ஆகிவிட்டால், இனி எதற்காக பாஜக அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்?
பாஜக நினைப்பதாக ராகுல் காந்தி பேசும் அந்த அரசியல் சட்ட மாற்றங்கள் என்ன, ஏது, எத்தகையவை என்று அவர் சொல்லவும் இல்லை. மங்கலாக ஒரு பூச்சாண்டியைக் காண்பிக்கிறார் ராகுல், அவ்வளவுதான். என்ன இருந்தாலும், எதுவானாலும், சுப்ரீம் கோர்ட்டின் மீதும் ராகுலுக்கு நம்பிக்கை இல்லையா?
கடைசியாக, எரிகின்ற தனது நப்பாசையை ராகுல் காந்தி எப்படியோ சொல்லிவிட்டார். அதாவது, இந்த முறை பாஜக ஜெயித்து அவர்கள் அரசியல் சட்டத்தையும் மாற்றிவிட்டால், பிறகு நாட்டில் எங்கும் தீப்பற்றி எரியுமாம்!
ராகுல் காந்தி அரசியலில் ஒரு அரைகுறையாக இருந்தால் போகட்டும். ஆனால் தேச விடுதலைக்காகத் தியாகம் செய்து இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்த பல தலைவர்கள் வளர்த்த காங்கிரஸ் கட்சி, இன்று இந்த அரைகுறையின் கையில் இருக்கிறது. இது பெரிய சோகம்.
ராகுல் காந்தி ஒரு அரைகுறை என்று தெரிந்தும், இவரை அண்டியும் தாங்கியும் நின்றிருந்தால் கட்சிக்குள் தங்கள் இடத்தை எளிதாகக் காத்துக் கொள்ளலாம், தங்களின் தனிப்பட்ட வளமைக்கு அது ஏதுவானது என்ற நினைப்பில் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் பல மூத்த தலைவர்களின் சுயநலம், அந்தக் அக்கட்சியின் இன்னொரு துர்பாக்கியம்.
நினைத்துப் பாருங்கள். நரேந்திர மோடி மட்டும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராக குஜராத்தில் பதிமூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டுப் பின்னர் காங்கிரஸ் பிரதமராகவும் பத்தாண்டுகள் ஜொலித்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் இப்படிச் சுயநலமிகளாக இருக்க மாட்டார்கள், அவர்களில் திறமைசாலிகள் மட்டும் மேலே உயர்ந்திருப்பார்கள், இல்லையா? ஆக, ஒரு கட்சியின் உயர் தலைவன் எப்படி அமைகிறான் என்பதை வைத்துத்தான் அக் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் அமைகிறார்கள், வளர்க்கப் படுகிறார்கள்.
இப்போது என்னிடம் ஏதோ சொல்கிறீர்களே, என்ன சொல்கிறீர்கள்? ஓஹோ, “பாஜக-வில் வாஜ்பாய் மாதிரி ஒரு தலைவர் இருந்ததால், மோடி மாதிரி ஒருவர் குஜராத்தில் முதல்வர் ஆனார். ஒரு கட்சிக்கு சோனியா காந்தி மாதிரி ஒரு குறுமதித் தலைவர் கிடைத்தால், அவருக்கு ராகுல் காந்தி மாதிரி ஒரு வாரிசு இருக்கும்போது, அந்த வாரிசு அரைகுறையாக இருந்தாலும் கட்சிக்குள் அடுத்த தலைவராக அவர்தானே வர முடியும், மோடி மாதிரி ஒரு திறமைசாலி அந்தக் கட்சிக்குள் எப்படித் தலையெடுக்க முடியும்” என்று என்னிடம் கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி தெளிவானது, நியாயமானது. உங்களை மறுத்துப் பேச நான் என்ன அரைகுறையா?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com