Home சினிமா சினி நியூஸ் மீம்ஸ் ஹீரோ வடிவேலு.. இது வெறும் பேரு இல்ல… வாழ்வியல் தத்துவம்!

மீம்ஸ் ஹீரோ வடிவேலு.. இது வெறும் பேரு இல்ல… வாழ்வியல் தத்துவம்!

வடிவேலு..பேர் அல்ல..அது ஒரு வாழ்வியல் தத்துவம்..! வடிவேலு… மீம்ஸ்… – டீவிக்கள், சோஷியல் மீடியாஸ், பொதுவெளிகள், தமிழர்களின் தினசரி உரையாடல்கள் என நீக்கமற நிறைந்திருக்கும் மூச்சுக்காற்று..

வாய்மொழியைவிட அவரின் உடல் மொழி செய்திருக்கும் துவம்சங்களால் இன்றளவும், தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சமாகவே மாறிப்போய் விட்டார் வைகை புயல் என்ற வடிவேலு.

26 ஆண்டுகளுக்கு முன்பு தேவர்மகன் படத்தில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில், ”என்னே? கர்மம், கழுவுற கையாலே சாப்பிடவும் வேண்டியிருக்கும்” என்று ஒல்லியான வடிவேலு, குணச்சித்திரத்தில் குமுறித்தள்ளியபோது அவருக்குள் இப்படி காமெடி காட்டாறு மறைந்திருக்கிறது என்பதை எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள்?

வண்டு முருகன்’, தீப்பொறி திருமுகம், அலார்ட் ஆறுமுகம் பிச்சுமணி’ நாய் சேகர், கைப்புள்ள, ‘சூனா பானா’, ‘ பேக்கரி வீரபாகு’, ‘ஸ்நேக் பாபு’, வக்கீல் படித்துறை பாண்டி’, ”என்கவுன்ட்டர் ஏகாம்பரம்’, ‘நேசமணி’, ‘புலிகேசி’…

இப்படி வடிவேலுவின் காரெக்டர்களை பட்டியலிடும்போது, அவரின் வாயால் வார்த்தைகளாக வந்து விழுந்து சாகா வரம் பெற்ற டயலாக்குகள்தான் எத்தனையெத்தனை?

சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?
பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது..
வடை போச்சே
நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்
யேய். அவனா நீ..

டயலாக் பட்டியல் அதுபாட்டிற்கு போய்க்கொண்டே இருக்கும்.. பொதுவாக, நகைச்சுவைக்கு, மண்சார்ந்த உணர்வுகளோடு பிரதிபலிக்கும்போது பல மடங்கு பலம் கூடிவிடும்.

நம்முடைய தெருக்கூத்துக்களில், புராணம் அல்லாமல் நடப்பவற்றில் இப்படித்தான் வாழ்வியல் நக்கல்களை மையமாக வைத்து அள்ளித் தெளிப்பார்கள்..

அந்தந்த காலம், ஆட்கள், சம்பவங்கள் போன்றவற்றை வைத்து காமடியை பின்னினால் அதுதொடர்பான விஷயங்ளை அறிந்தவர்களுக்கு மட்டுமே சிரிப்பை வரவழைக்கும். அதேபோலத்தான் சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை வைத்து காமெடி பண்ணுவதும், பெரும்பாலும் சுலபத்தில் புரியாது. நீண்ட காலத்திற்கும் நிலைக்காது.

ஆர்னால்ட்டையும் அனிருத்துவும் ஒப்பிட்டு காமெடி செய்தால் எத்தனைபேருக்கு புரியும்? அது எவ்வளவு தூரம் தாங்கும்..?

ஆனால் பொதுவாக தனி மனித உணர்வுகளை கோர்த்து பின்னப்படுகிற காமெடி காட்சிகள்தான் தலைமுறைகள் கடந்து பிரவாகம் எடுக்கும்..

மோசடித்தனத்தை நச்சென்று விவரித்த கல்யாண பரிசு தங்கவேலு சேட்டைகள் போன்றவை இதே ரகம்தான்.

அந்த வழியை பின்பற்றி, தனி மனித அலம்பல்களை உள்வாங்கி அப்படியே வெளியேகாட்டிய வடிவேலு உண்மையிலேயே வியக்கத்தக்க கலைஞன்…

அதனால்தான் அவரது ஒவ்வொரு டயலாக்கும் எல்லா மட்டத்து ஆட்களாலேயும், சட்டசபையில்கூட, நகைச்சுவை சந்தர்ப்பத்திற்காக எடுத்தாளப்பட்டுவருகிறது.

மற்றவர்களை வயிறுவலிக்க சிரிக்க வைப்பது என்பது இயற்கையின் மிகப்பெரிய அருட் கொடை.. அந்த வரத்தைப் பெற்ற, ஒன் அண்ட் ஒன்லி மீம்ஸ் ஹீரோ வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

  • கருத்து: ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version