போலீசாரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் காவலர்களைத் தாக்கிய ரவுடி ஜோசப்ராஜ் வலது கை, இடது கால் முறிந்தது. புதுச்சேரியில் ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
புதுச்சேரி, கரிகலாம்பாக்கத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் அப் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மைக்கேல், சிவகுரு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ஜோசப் ராஜ் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து காவலர்கள் இருவரும் விசாரித்தனர்.
அப்போது, திடீரென காவலர்களை குற்றவாளிகள் இருவரும் தாக்கினர். அவர்களை போலீஸாரும் திருப்பித் தாக்கினர். அப்போது இரு தரப்பினரும் நடுசாலையில் கட்டிப் புரண்டனர். இதனை அருகில் நின்றிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இந்த வீடியோ வைரலானதால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், ரோஸ் அய்யனார் மற்றும் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
தொடர்ந்து, வில்லியனூர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரின் தீவிர தேடுதலில், ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதைக் கண்டு அவனைக்கைது செய்யச் சென்றனர். ஆனால், போலீசார் வருவதைக் கண்டு ஜோசப் தப்பித்து ஓடினான். அவனை போலீசார் விரட்டிச் சென்று பிடித்த போது, அவன் கீழே விழுந்து இடது கை முறிந்துபோனதாக போலீஸார் கூறியுள்ளன.
பின்னர் அவனை போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.