குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கே குற்றாலம் பராசக்தி நகர் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் பார் வசதி இல்லாததால், மது வாங்குபவர்கள் பலர் அந்த இடத்திலேயே மது அருந்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அறை எடுத்து தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், பராசக்தி நகர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த கடைக்கு விரைந்து செல்வதற்காக பிரதான சாலையை விட்டுவிட்டு தனியார் வீடுகளின் சந்து பொந்துகளில் நுழைந்து ஏராளமானோர் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, குற்றாலத்தில் திறந்த வெளியில், சாலையோரத்தில், காரில் இருந்தபடி மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கே மது அருந்துவோரிடம் இருந்து மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த உத்தரவுகளை காவல்துறையினர் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை, வேறு இடத்திற்கு மாற்ற, பகுதிவாசிகள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.