சேலம்:
கர்நாடக அரசு கபினி அணையில் இருந்து காவிரியில் திடீரென தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் அதிக அளவில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும் என்பதால், இதை அடுத்து கர்நாடக அரசு காவிரியில் நீரைத் திறந்து விட்டுள்ளது.
தற்போது காவிரியில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் தமிழகத்தை நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கபினி அணையில் இருந்து நீர் திறந்து விட்டிருப்பதால், ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 42.34 அடியாக இருந்தது. இன்று 42.23 அடியாக குறைந்திருந்தது. இந்நிலையில், கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாலை ஒகேனக்கல்லை அடைந்தது. இது இன்று மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் அணையில் நீர் மட்டம் உயரும்.