கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.குமாரதாஸ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,…
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவரும், மக்கள் பிரச்சனைக்காக துணிச்சலாக களம் கண்டவரும், தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக வர்த்தக துறைமுகம் கொண்டு வந்தே தீரவேண்டும் என்பதற்காக துணிச்சலுடன் களம் கண்டவரும், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் செயல்பட்டபோது கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த திறந்த மனதோடு ஒத்துழைப்புத் தந்தவருமான அன்பு அண்ணன் டாக்டர். குமாரதாஸ் அவர்களின் மறைவு செய்தி ஒரு பேரிடியாக கருதுகிறேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அவர் உடல்நிலை சரியில்லாத போதும், முழு ஒத்துழைப்புத் தந்து அவர் பணியாற்றியது என்னால் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும். கொண்ட கொள்கையில் உறுதிபூண்டு மாவட்டத்தின் எதிர்கால நன்மைக்காக தன் காலம் முழுவதும் உழைத்த அண்ணன் குமாரதாஸ் அவர்களின் இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக கருதுகிறேன்.
அவருடைய மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரியில் வர்த்தகத் துறைமுகம் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற அவரது லட்சியத்தை மனதில் தாங்கி, அதை செயல்படுத்தும் வகையில் உறுதி பூண்டு, பணி செய்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடியில் நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.