உத்தனப்பள்ளி அருகே பைரப்பா மலையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள அனைத்து சாமி சிலைகளையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
ஓசூர், உத்தனப்பள்ளி அருகே, பைரப்பா மலையில், சிவன் கோவில் ஒன்று உள்ளது. ஊரடங்கு நேரம் என்பதால், கோவிலில் பூஜைகள் மட்டும் நடக்கிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் காலை நேரத்தில் வழக்கம் போல், கோவிலில் பூஜை செய்ய பூசாரி சென்றார். அப்போது, கோவிலில் இருந்த நந்தி, லிங்கம் மற்றும் மேலும் சில சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்படி, உத்தனப்பள்ளி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பூட்டப்பட்டு, பக்தர்கள் சென்று வராத நிலையில், சுவாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.