ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது இதனைத் தெரிவித்த அவர் … ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்துள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் அளிக்கப்படும். ஆன் லைன் ரம்மி போன்ற இணைய தள விளையாட்டுகளை நடத்துவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர்… என்று கூறினார்.
இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றார். கட்சி தொடங்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. என்றார்.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பெற்றோரும் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற பெற்றோரின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு வந்தது. பெற்றோரின் கோரிக்கைகளை ஏற்றே பள்ளி, கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு .என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி