முதல்வர் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.
கோவை தெற்கு மாவட்ட பாஜக, அரிமா சங்கம் மாவட்டம் 324-சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு 100 பேருக்கு காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள் வழங்கும் விழா நேற்று (21.12.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் செய்து வருகின்றனர். ஊழலை பற்றி பேசும் கட்சிக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். பேசுபவர்களுக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். இன்றைக்கு அதுபற்றி பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுகவினர், பாஜவுக்கு இவ்வளவு வாய்ப்புகளை அளிக்க மாட்டார்கள்.
ஆனால், தற்போது வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கின்றனர். ரபேல் கைக்கடிகாரத்தை பற்றி டீ கடைகளில் பேசும்போது அந்த கைக்கடிகாரத்தின் ரசீதை வெளியிடுவேன். அதுவரை பொறுமையாக இருக்கப்போகிறேன்.
இதுபற்றி அவர்கள் நிறைய பேச வேண்டும். அனைத்து அமைச்சர்களும் இதுபற்றி பேச வேண்டும். பொதுமக்கள் திமுகவின் ஊழல் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். திமுக குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 2 லட்சம் கோடி என்பது குறைவோ என்று எனக்கு தோன்றுகிறது. ஏப்ரல் மாதம் பாத யாத்திரை தொடங்கும்போது சொத்துப் பட்டியலை வெளியிடுவோம்.
அப்போது, அதன் மதிப்பானது நிச்சயம் 2 லட்சம் கோடியை தாண்டியிருக்கும்.
பாஜக மட்டும்தான் இதைப்பற்றி பேச தகுதியான கட்சி.
முதல்வர் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் இங்கு தைரியம் கிடையாது. ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப்பட்டியலையும் தனித்தனியாக வெளியிடுவோம். ஏப்ரல் மாதத்துக்குள் பாஜக பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-ல் திமுகவுக்கு பாஜகவால் முடிவுரை எழுத முடியும் என அவர் பேசினார்.
இந்த நிகழ்வு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அண்ணாமலை பதிவு செய்திருந்த போது…. ‘முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பாஜக கோவை தெற்கு மாவட்டம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து நடத்திய நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் திரு வசந்த ராஜன், மாநில பொதுச் செயலாளர் திரு AP முருகானந்தம் ஆகியோருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் பிரகாசிக்க பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதழ் ஒன்று, இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட காதுகேட்கும் கருவிகள் ரூ.350 மதிப்புடையன என்றும், ஆனால் அவை ரூ.10 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து மீண்டும் இன்று தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் அண்ணாமலை பதிலளித்தார். அதில்…
நேற்று, சுந்தராபுரத்தில் 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்துடன் இணைந்து தமிழக பாஜக வழங்கியது.
அரிமா சங்கத்தின் சார்பாக, தேசிய இயக்குனர் திரு மதனகோபால் அவர்களும் மாவட்ட ஆளுநர் திரு ராம்குமார் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
செயற்கை கால்களை தமிழக பாஜக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது; காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர்.
அரிமா சங்கம் வழங்கிய காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது.
ஜூனியர் விகடன் இதழில் இன்று, 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய் தான் என்ற உண்மை தெரியவந்தது.
அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை தமிழக பாஜக வழங்கும். அது மட்டுமல்ல 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக தமிழக பாஜக செய்யும்.
இதன் தொடக்கமாக இன்று காலை முதல் நான்கு குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்…என்று குறிப்பிட்டுள்ளார்.