திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியிலுள்ள காட்டாற்றில் அண்மையில் மண் அள்ளியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் தற்போது பெய்த கனமழை காரணமாக நீர் நிரம்பி காணப்பட்டது.
அதே ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்துவரும் முகமது இலியாஸ் என்பவரின் மகள் ஆசிராபானு(11), மகன் ஆசில்(8), உறவினர் ஆதம்ஷாவின் மகள் ரிஸ்வானா(10) ஆகியோர் நேற்று மாலை தங்களின் பாட்டி தவுலத் பீவியுடன் அங்கு குளிக்கச் சென்றனர்.
தவுலத் பீவி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் 3 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் 3 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதிர்ச்சியடைந்த தவுலத் பீவியின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தைகளைத் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு 3 குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.
தகவலறிந்த சிறுகனூர் போலீஸார் அங்கு சென்று 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.