புதுதில்லி:
சுமார் 500 வங்கிக் கிளைகளில் ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் உளவு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சிடிக்கள் அனைத்தும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிச.10ல் குஜராத் தீஸாவில் அமுல் நிறுவன விழாவில் பேசிய பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற விவகாரம் என்பது, நாட்டில் இருந்து ஊழலை ஒட்டுமொத்தமாக வெளியேற்றச் செய்யும் முயற்சிதான். ஊழல்வாதிகளை நிச்சயம் தண்டிப்போம். வங்கி அதிகாரிகள் பலர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தார்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மோடி திரும்பப் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் நாம் நம் வேலையப் பார்ப்போம் என்று பின் வாசல் வழியாக வேலை செய்தார்கள். ஆனால், மோடி அந்தப் பின்வாசலில் கேமரா மூலம் கண்காணிக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் கைதாவார்கள். தவறிழைத்தவர்கள் எவரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.” என்று பேசினார் பிரதமர் மோடி.
இதனிடையே ஊழல் வங்கி ஊழியர்களுக்கு கெட்ட காலம் துவங்கியுள்ளது. சுமார் 500 வங்கிக் கிளைகளில் மத்திய அரசு ஸ்டிங் ஆபரேஷன் மூலம், ரகசிய வீடியோ எடுத்துள்ளது; அந்த வீடியோ சி.டி-க்கள் இப்போது நிதி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர், தரகர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் பழைய நோட்டுக்களை வங்கி ஊழியர்களின் உதவியுடன் எவ்வாறு மாற்றினர் என்பது ஸ்டிங் சி.டி-க்களில் பதிவாகியுள்ளது,.
[embedyt] https://www.youtube.com/watch?v=TQgrBVz_pv4[/embedyt]
நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நாட்டில் ஓரளவு பணத்தட்டுப்பாடு தீர்ந்தவுடன், தவறிழைத்த வங்கி அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.
வங்கி ஊழியர்களின் ஊழல் போக்கால்தான் பொது மக்கள் இவ்வளவு அவதிக்குள்ளானார்கள்; பெரும் சிரமங்களைச் சந்தித்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த சிடிக்களில், பொதுமக்கள் பெரும் வரிசையில் வங்கிக்கு வெளியே காத்திருக்கும் நிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள், வெவ்வேறு விதமான ஐ.டி.,க்களில் எவ்வாறு பனத்தை கட்டுக் கட்டாக மாற்றினார்கள் என்பது பதிவாகியுள்ளது. இது வங்கி ஊழியர்களிடையே தற்போது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
[embedyt] https://www.youtube.com/watch?v=CpOJqHkFflo[/embedyt]