பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து, கட்சியின் துணைத் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர் அண்மைக் காலமாக நிதிஷ் குமாரின் முடிவுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இதுகுறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசிய நிதிஷ்குமார், மத்திய உள்துறை அமைச்சராக தற்போது உள்ள அமித் ஷா அன்று கேட்டுக் கொண்டதாலேயே பிரசாந்த் கிஷோரை தமது கட்சியில் சேர்த்துக் கொண்டதாகக் கூறினார்.
இந்நிலையில் நிதிஷ்குமாரின் கருத்துக்குப் பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், தன்னைக் குறித்து நிதிஷ்குமார் கூறுவது பொய் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோரும், கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மாவும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தேர்தல் வியூக நிபுணர் என ஊடகங்களால் முன்வைக்கப் படும் பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.,வின் வெற்றியின் பின் இருந்ததாகக் கூறப் பட்டது. மேலும், பிரதமர் மோடி குறித்த பிரசாரத்துக்கும் அவரே முக்கியக் காரணகர்த்தா என்றும் கூறப் பட்டது.
பிரதமர் மோடி எப்படி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், எங்கே மேடை போட்டு எப்படிப் பேசுவது, சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்வது எப்படி போன்ற பல நுணுக்கமான விஷயங்களை அவர் மேற்பார்வையில், பாஜக., சிறப்பாகச் செய்ததாகக் கூறப் பட்டது.
தொடர்ந்து, கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த பீஹார் சட்டசபைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனார். இதற்கு பரிகாரமாக 2018ல் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தள மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரசாந்த் தமிழகத்தில் தேர்தல் வியூகத்தில் இறங்க முடிவு செய்தார். பிரசாந்த் கிஷோருடன் தமிழகத்தில் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப் பட்டது. தொடர்ந்து, தங்களது பக்கத்தில் இருந்து தேர்தல் வியூகங்களைச் செய்து வந்த சுனில் விலகியதால், பிரசாந்த் கிஷோரை திமுக., அழைத்தது. தொடர்ந்து அவரும் திமுக.,வுடன் இணைந்து தமது நிறுவனம் மூலம் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், அமித்ஷா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே பிரசாந்த் கிஷோரை எங்கள் கட்சியில் சேர்த்தோம். அவருக்கு கட்சியில் உயர் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அவர் கட்சியில் தொடர்ந்து இருப்பதும் வெளியேறுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அவர் விரும்பினால் கட்சியை விட்டு தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நிதிஷின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த பின்னணியில் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.
இதற்காக, பீகார் முதல்வராக நாற்காலியில் தொடர்வதற்கு நல்வாழ்த்துகள் என்றும், நன்றி என்றும் கூறி ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
மத்தியில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் பரிந்துரையின் பேரிலேயே பிரசாந்த் கிஷோர் நிதிஷின் கட்சியில் சேர்ந்தார் என்பதும், நிதிஷால் தற்போது வெளியேற்றப் பட்டுள்ள பிரசாந்த் கிஷோரே திமுக.,வுக்கு வேலை செய்வதும், பிரசாந்த் கிஷோர் முன்னர் மோடிக்காக பாஜக.,வுடன் இணைந்து வேலை செய்தவர் என்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.