அப்பாடா.. இனி புதுச்சேரிக்கு ஓடவேணாம்… நம்ம ஊர்லயே டாஸ்மாக் கடையை தொறந்துடறாங்க… புதுச்சேரிய பாத்து ஓடி, போலீஸு அடிச்சி தொரத்தி… எவ்ளோ கஷ்டம்… எவ்ளோ கஷ்டம் என்று குடிமகன்களான ‘மதுப்பிரியர்’கள் ரொம்பவே சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம். ஆமாம், திங்கள் கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப் படவுள்ளன.
தற்போது ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கில் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறப்பு :
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப் படுகிறது. டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்று இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப் பட்டிருந்த நிலையில், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில எல்லை கிராமங்களில் வசிப்பவர்கள், அந்த மாநிலங்களுக்குச் சென்று மது வகைகளை வாங்கிக் குடித்து வந்தனர். இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரம், மது வகைகளின் விலைகள் உயர்த்தப் பட்டுள்ளது, கொஞ்சம் வயித்தெரிச்சலையும் கூடவே கொடுத்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடமாக மது கொள்முதல் குறைந்துவிட்ட நிலையில், டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கி ப்ளாக் மார்க்கெட்டில் விற்பவர்கள் அதிகரித்து விட்டனர்.
இந்நிலையில், கொரோனா கால ஊரடங்கால் வர்த்தகம் படுத்துப் போன, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் மதுபான ஆலை உரிமையாளர்கள், அரசு மது கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு அரசுத் தரப்பில் இருந்து பச்சைக்கொடி காட்டப் பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.