நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.இந்த மழை குறித்து தற்போது முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார். ரமணன் தனது பேட்டியில், பொதுவாக மழை வருவதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது சுழற்சி இருக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத் வழியே இது ராஜஸ்தான் சென்றுவிட்டது. ஆனால் அரபிக்கடல் காற்றானது தமிழகம் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் மேலடுக்கு சுழற்சியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்த காற்று தமிழகம் வழியாக வடக்கு நோக்கி இழுக்கப்படுவதால் மழை பெய்கிறது. மேலடுக்கில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று செல்வதால் தான் மழை பெய்து வருகிறது. இந்த மழையை கணித்துக் கூற முடியாது. ஏனென்றால் காற்று எப்போது வீசும் என்பதை கணிக்கவே முடியாது. அதிகாலையில் வீசும் காற்று மறுநாள் மழையாக மாறும். இதை முன்பே கணிப்பது சிரமமான ஒன்றாகும். இதில் நாம் சாட்டிலைட் புகைப்படங்களை கொண்டும் கணிக்க முடியாது. சாட்டிலைட் புகைப்படங்கள் காற்று காரணமாக நொடிக்கு நொடி மாறும். இதனால் மழை பெய்யும் பெய்யாது என்பதை நாம் முன் கூட்டியே கணிக்க முடியாது, என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.