சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
28. முயற்சியின்றி பலனில்லை!
ஸ்லோகம்:
உத்யமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |
ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிசந்தி முகே ம்ருகா: ||
— ஹிதோபதேசம் 1-36
பொருள்:
நாம் நினைத்த செயல்களையும் சாதிக்க நினைத்த இலக்குகளையும் கடின முயற்சியால் மட்டுமே அடைய முடியும். மனதில் நினைத்தால் மட்டுமே நடந்து விடாது. சிங்கம் தன் குகையில் படுத்துக் கொண்டிருந்தால் விலங்குகள் தாமாகவே வந்து அதன் வாயில் விழாது அல்லவா?
விளக்கம்:
வாழ்க்கைக்கு ஒரு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய உழைக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நினைத்தது நிறைவேறும். வெறும் பகற்கனவால் பலனில்லை. கனவை நனவாக்குவதற்கு தேவையான எரிபொருள் உழைப்பு. அதாவது சக்தி அனைத்தையும் திரட்டிச் செய்ய வேண்டிய விடாமுயற்சி. அத்தகைய முயற்சியின் தேவையைக் கூறுவதே இந்த ஸ்லோகம். சிங்கத்தை போல் வீரமும் சாமர்த்தியம் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை உபயோகிப்பதும் முக்கியமானது என்பது இந்த ஸ்லோகம் அளிக்கும் மற்றுமொரு செய்தி.
லட்சியம் சிறியதானாலும் பெரியதானாலும் அதற்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கனவு நிறைவேறும். சிங்கம் எத்தனை வலிமை பொருந்தியது ஆனாலும் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு குகையில் இருந்து வெளிவரவேண்டும். ஓட வேண்டும். மானை விட வேகமாக ஓடினால்தான் அதற்கு வயிறு நிறையும்.
கனவு காணவும் வேண்டும். அது நிறைவேறுவதற்காக முயற்சித்து உழைக்கவும் வேண்டும். ஒரு மாணவன் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? அதற்கான போட்டித் தேர்வு எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும். அதற்காக ஓய்வின்றி படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் டாக்டராவேன் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நடக்காது அல்லவா?
“வாழ்க்கை கனவுகள் என்றால் நமக்கு உறக்கத்தில் வரும் கனவுகள் அல்ல. நம்மை உறங்க விடாமல் செய்யும் கனவுகள்” என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம். இந்த ஸ்லோகம் கூறும் கருத்தும் இதுவே.