― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்விநாயகருக்கு 21 வித இலைகளால் பூஜை செய்வது ஏன்? பலன் என்ன?

விநாயகருக்கு 21 வித இலைகளால் பூஜை செய்வது ஏன்? பலன் என்ன?

- Advertisement -

விநாயகருக்கு 21 வித இலைகளால் பூஜை செய்வதன் பொருள் என்ன?

நம் கலாசாரத்தில் எந்த தெய்வ வழிபாடானாலும் “பரிமள பத்ர புஷ்பை: பூஜயாமி” என்று கூறுவது வழக்கம். அதாவது மணம் மிகுந்த இலைகளாலும் மலர்களாலும் தெய்வங்களை அர்ச்சனை செய்கிறோம். சர்வ தேவதைகளின் வழிபாட்டிலும் புஷ்பங்களும் இலைகளும் கூறப்பட்டுள்ளன.

விஷ்ணுவுக்கு முக்கியமாக துளசி இலை கூறப்பட்டாலும் வில்வ இலை கூட விஷ்ணுவுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மணம் மிகுந்த மருவம், தவனம், மருக்கொழுந்து போன்ற இலைகளையும் பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். அதேபோல் சிவ பூஜையிலும் பலவித இலைகளை பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். துளசி வில்வம் நொச்சி எலுமிச்சை நெல்லி இவற்றை ‘பஞ்ச வில்வம்’ என்பார்கள். இவை தெய்வ பூஜையில் பிரசித்தியாக உள்ள இலைகள்.

அதேபோல் கணபதி வழிபாட்டிலும் ‘பரிமள பத்ர புஷ்ப அர்ச்சனை’ ஒரு முக்கிய பாகம். கணபதி வழிபாட்டில் ‘ஏக விம்சதி பத்ர பூஜை’ என்பது சிறப்பாகக் கூறப்படுகிறது. இலைகளைக் கொண்டு அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் கணபதிக்கு 21 வித இலைகள் சிறப்பாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு பூஜையிலும் ஒவ்வொரு திரவியத்திற்கும் ஒவ்வொரு சிறப்பான அர்த்தம் இருக்கும். கணபதிக்கு சமர்ப்பிக்கும் இருபத்தோரு இலைகளும் தெய்வீக இலைகள். மரங்களில் கூட சாதாரண மரங்கள், தெய்வீக விருட்சங்கள் என்று இரு விதங்கள் உள்ளன. இந்த திவ்ய இலைகளில் தெய்வீக சக்தி மறைந்துள்ளது. அத்திமரம், அரசமரம் போன்றவற்றை தெய்வீக விருட்சங்களாக வணங்குகிறோம். அதேபோல் கணபதி பூஜையில் உபயோகிக்கும் இலைகளும் திவ்ய குணம் கொண்டவை. ஔஷத குணங்கள் நிறைந்தவை.

ருத்ரத்தில் “ஓஷதீனாம் பதயே நமஹ” என்ற மந்திரம் உள்ளது. மூலிகைகளுக்கு இறைவன் அதிபதி. அது அதுமட்டுமல்ல. “வ்ருக்ஷாணாம் பதயே நமஹ” – மரங்களுக்குப் பிரபு. மரங்களைக் கூட இறை சொரூபங்களாக தரிசிக்கும் சிறந்த கலாச்சாரம் கொண்டவர்கள் நாம். “வ்ருக்ஷேப்யோ ஹரி கேசேப்ய:” என்ற மந்திரம் உள்ளது.

விருட்சங்களின் தொடர்புடைய புஷ்பங்களும் இலைகளும் இறைவழிபாட்டில் பயன்படுத்துவது என்பது அவற்றை இறை வடிவங்களாக கௌரவித்து வணங்குவதன் பொருட்டே! ஏனென்றால் நம் கலாச்சாரத்தில் இறைவனுக்கும் இறைவழிபாட்டில் உபயோகிக்கும் பொருட்களுக்கும் வேறுபாடு கிடையாது. தெய்வீக குணம் இல்லாத பொருளை இறை வழிபாட்டிற்கு உபயோகிக்கக் கூடாது என்று கூட சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தெய்வீகமான பொருட்களையே தெய்வத்திடம் சமர்ப்பிக்கிறோம். அதனால் நாம் பயன்படுத்துபவை மங்களமானவையாகவும் பவித்தரமானதாகவும் இருக்கவேண்டும். பவித்ரம், மங்களம் இரண்டும் தேவதைகளின் குணங்கள்.

ப்ரக்ருதி தத்துவம் அல்லது ப்ருத்வி தத்துவம் கொண்ட கணபதியை வழிபடும் போது மண்ணிலிருந்து தோன்றிய திவ்யமான இலைகளால் வழிபடும்படி கூறியுள்ளார்கள். அதிலும் இருபத்தோரு என்ற எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. நான்கு, இருபத்தொன்று இந்த இரண்டு எண்களும் கணபதிக்கு பிரியமானவை. 21 விதமான தெய்வீக இலைகளால் அர்ச்சனை செய்வது என்பதை அதனால்தான் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதில் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பத்ரம் அல்லது புஷ்பம் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒரு விஞ்ஞானம். இவை பற்றி விரிவான செய்திகள் நம் புராணங்களில் காணப்படுகின்றன. அதேபோல் 21 வித இலைகளால் செய்யும் பூஜையில் இருபத்தோரு வித யக்யம் செய்த சிறப்பு உள்ளது. வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்யங்களில் இருபத்தோரு விதம் என்பது ஒரு வழிமுறை.

அதேபோல் மனிதனின் ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. மொத்தம் பத்து. அவற்றால் நல்லது கெட்டது என்ற இருவித செயல்களைச் செய்கிறான் மனிதன். அவற்றோடு சேர்ந்து இருபது ஆகிறது. அதில் மனமும் இணைகிறது. அதனால் மொத்தம் 21 ஆகிறது. இந்த 21 செயல்களையும் இறைவனுக்கு சமர்ப்பித்தல் என்பதே இந்த ‘ஏக விம்சதி பத்ர பூஜை’ யில் உள்ள ரகசியம்.

பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

புராணங்களில் மற்றுமொரு விசேஷம் கூறப்பட்டுள்ளது. ஏக விம்சதி பத்ரங்களால் நாம் கணபதியை அர்ச்சனை செய்தால் இருபத்தோரு வித நரகங்களிலிருந்து காப்பாற்றப் படுவோம். அதாவது இருபத்தோரு வித கஷ்டங்கள் இல்லாமல் நம்மை கணபதி ரட்சிப்பார். நம் புலன்களால் அடையும் பலவித துயரங்களை விலக்குகிறார். அது இந்த இருபத்தோரு என்ற எண்ணில் உள்ள முக்கியத்துவம். விசேஷமாக இவை அனைத்தையும் விடவும் யக்யம் தொடர்பான முக்கியத்துவமே இதில் அதிகம் காணப்படுகிறது.

அதனால் எளிதாக யக்யம் செய்யும் கிரியையே கணபதி பூஜையில் காணப்படும் சிறப்பு. வேத காலத்தில் பல விதமான யக்யங்களால் இறைவனை பிரசன்னம் செய்துகொண்டார்கள். எளிதான பூஜை முறைகளால் இறைவனை மகிழ்விக்கும் வழிமுறைகளில் ஏக விம்சதி பத்ரம் சமர்ப்பிப்பதை ஒரு மகா யக்ஞமாக நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளார்கள்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version