செங்கோட்டையில் அருள்மிகு தர்ஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயில் தைப் பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள புகழ் பெற்ற அறம்வளர்த்த நாயகி (தர்ஸம்வர்த்தினி) சமேத குலசேகரநாதர் கோயிலில் தைப் பூச திருவிழா கடந்த 30 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. விநாயகர், முருகன் , சுவாமி தேர்களும் அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது. இந்த விழாவில் செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை (சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள்)-ஐச் சேர்ந்த இந்தக் கோயிலில் விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் மற்றும் ஊரின் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.