- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்

முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்

thirupparankundram murugan - 2026

முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில்  காட்சி தரும்  வடிவங்கள்:

*கும்பகோணம் அருகில் ‘அழகாபுத்தூர்” என்ற இடத்தில் உள்ள கோவிலில் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.

*திருப்போரூரில் முத்துக் குமார சுவாமியாக காட்சி தரும் முருகப் பெருமானின் மூல விக்கிரகம் இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.

*நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் இருந்து வியர்வை வருவது வியப்பான ஒன்றாகும்.

*ஏலகிரி மலைக்கு அருகில் ஜலகாம்பாறை என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலில் ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. முருகன் விக்கிரகம் இல்லை. இக்கோவிலில் வேல் வடிவில் முருகன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமாகும்.

*மாம்பழத்திற்காக கோபித்துக் கொண்டு பழனியில் ஆண்டி கோலம் பூண்ட முருகன், ‘திருநள்ளாறு” தர்ப்பாரண்யேஸ்வர் ஆலயத்தில் கையில் மாம்பழத்தோடு காட்சி தருகிறார்.

*கர்நாடக மாநிலத்தில் ‘காட்டி சுப்ரமணியா” என்ற தலத்தில் முருகன் பாம்பு வடிவில் காட்சியளிக்கிறார். இக்கோவில் உள்ள பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதேப்போல் யாரும் பாம்பினை கண்டால் துன்புறுத்துவதும் இல்லை.

*சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் உள்ள முருகன், இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். சென்னிமலை முருகன் கோவில் சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*கர்நாடகா மாநிலத்தில் உள்ள நஞ்சன் கூடு நஞ்சுகன்டேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் வடிவில் காட்சி தருகிறார்.

*திருக்கடையூர் அருகில் உள்ள திருவிடைக்கழி முருகன் கோவில் சிவாலய வடிவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் முருகன் சிலைக்கு முன்பு ஸ்படிக லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார்.

*மயிலாடுதுறைக்கு அருகில் திருவிடைக்கழி என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் இருக்கும் குமரன் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

*கும்பகோணத்தில் உள்ள ‘வியாழ சோமநாதர்” கோவிலில் முருகன், காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

*திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்கள் மற்றும் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.

*மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் உள்ள கோவிலில் முருகன் கண்ணீர் வடித்த நிலையில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

*கனக கிரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் முருகன் கைகளில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

*மயிலாடுதுறைக்கு அருகில் நெய்குப்பை என்ற ஊரில் பாலமுருகன், அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார்.

*புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. அக்கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும், மறு கரத்தில் ‘சின்” முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

தொகுப்பு: கவிஞர் முருகதாசன்

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version