கார்த்திகை பௌர்ணமி மகிமை… தொடர்ச்சி!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம். அதனால் இந்த மாதத்தில் சுப்பிரமணியரின் வழிபாடு சிறப்பானதாக கூறப்படுகிறது.
அக்னி ஹோத்திரத்திற்கு ஈடானது தீபமேற்றி வழிபடும் வழக்கம். அந்த தீபத்தின் ரூபம் சுப்பிரமணியர் என்கிறார் மகாசுவாமி.ஒரு தீபம் ஏற்றினோம் என்றாலே அங்கு சுப்பிரமணியர் உள்ளார் என்பது பொருள். அதனால் கார்த்திகை பௌர்ணமியன்று தீப தரிசனம் செய்வது குமாரசுவாமியை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று போற்றப்படுகிறது.
தேவசேனாதிபதியான குமாரஸ்வாமி தரிசனத்திற்காக இன்று தேவதைகள் அனைவரும் ஸ்கந்தலோகமும், திவ்யமான கைலாசமும் சென்று வழிபடுவார்கள். சிதறிப்போன தேவர்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களுக்கு சக்தியளித்து தானும் சக்தி ஆயுதம் தாங்கி சேனாதிபதியாக தேவதைகளை வழிநடத்தி அசுர சம்ஹாரம் செய்தார்.
அதனால் சுப்பிரமணியரை நம் இல்லத்தில் விளக்கேற்றி வழிபடும் போது தேவர்கள் அனைவரும் கூட நம் இல்லத்தில் இருப்பார்கள். ஏனென்றால் தேவதைகள் சுப்பிரமணியரின் படைவீரர்கள். “சேனானீனாம் அஹம் ஸ்கந்த:” என்றார் நாராயணன்.
இன்றைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பு. ஏனென்றால் நாம் ஸ்கந்த லோகமோ, கைலாசமோ செல்ல இயலாது. வீட்டிலாவது சுப்பிரமணிய வழிபாடு செய்வது உகந்தது. திவ்யமான பலனை அளிக்கக்கூடியது. துக்கங்களை போக்கக்கூடியது.
இத்தகைய சிறப்பான, யக்ஞத்திற்கு சமமான இந்த மாதத்தில் பிரதானமாக மற்றுமொரு சிறப்பு உள்ளது. இன்று கிருஷ்ண பரமாத்மா ராசலீலை நடத்திய தினம். கோபிகைகளாகப் பிறந்த அநேக யோகிகள் சர்வேந்திரியங்களாலும், அந்தக்கரணத்தாலும் கிருஷ்ணரசபானம் செய்ய வேண்டுமென்று பிறப்பெடுத்த புண்ணிய ஜீவிகள்.
அந்த கோபிகைகள் அனைவருக்கும் ராசலீலை எனப்படும் முக்தியை அளித்தான் பகவான். ‘ராசம்’ என்றால் ‘ரசானுபவம்’. ‘ரசம்’ என்பது பரபிரும்ம அனுபவம். ‘ரசோவைசஹ’ என்கிறது சாந்தோக்ய உபநிஷத்து. படைப்பின் சாராம்சமான பரப்பிரம்மமே ‘ரசம்’.
அந்த பரப்பிரம்மாவை அடைவதே ‘ராசம்’. அது பரமாத்மா அருளால்தான் கிடைக்க வேண்டுமே தவிர நாமாகப் பெற முடியாது. பரமாத்மாவின் அனுகிரகத்திற்கு லீலை என்று பெயர். பிரம்மானுபவம் ‘ராசம்’. அது பகவானின் அருளால் கிடைப்பதால் ‘ராசலீலை’ எனப்படுகிறது.
ராசலீலை மகோத்சவம் நடந்த நாளே கார்த்திகை பௌர்ணமி. பிருந்தாவனத்தில் இன்றைய தினம் சிறப்பாக ‘ராசோத்சவம்’ நடைபெறுகிறது. வட இந்தியாவில் பல இடங்களில் ராசோற்சவம் நடத்துவார்கள். தூய்மையடைந்த ஜீவாத்மாக்கள் பரமாத்மாவோடு ஐக்கியம் பெறுவதே இதில் பொதிந்துள்ள பரமார்த்தம்.
அதுமட்டுமல்ல ராசலீலைக்கும் ராசபூர்ணிமாவுக்கும் அதிதேவதையாக வழிபடப்படுபவள் கோலோக நிவாசினியாகிய ராதாதேவி. இன்றைய தினம் ராதாதேவியை பிரத்தியேகமாக வழிபட்டு ஆராதிப்பர்.
கார்த்திகை பௌர்ணமியன்று கிருஷ்ணரோடு கூட அனைவரும் ராதா தேவியை சரணடைவார்கள். ராதா தத்துவம் அத்விதீயமானது… அமோகமானது. சர்வ தேவதைகளின் தத்துவங்களுக்கும் மேலான படியில் உள்ளது ராதா தேவியின் தத்துவம்.
ராதா தேவி பிரேமானந்த ஸ்வரூபினி. பிரேமையும் ஆனந்தமும் ஒரு வடிவெடுத்தால் அதுவே ராதாதேவி.
இன்றைய தினம் ராதா தேவியை வணங்கி வழிபட்டு, ராதா நாமத்தை ஜபம் செய்து நம் மனம் தூய்மை அடைய வேண்டும். அதற்கு கிருஷ்ண பரமாத்மாவான தாமோதரனின் அருள் கிடைக்க வேண்டும். அத்தகைய ராதா கிருஷ்ணர்களை வணங்கி உய்வடைவோம்!