ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்: பகுதி: 6
– மீ.விசுவநாதன்
நாம் குருவின் சந்நிதிக்குச் சென்று குருவின் முன் நமஸ்கரித்து, அவருக்குச் சேவைகள் செய்து, சந்தேகங்களை எழுப்பி, ஞானத்தை அங்கு பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்சேன சேவயா
உபதேக்ஷயந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சின: “
(நமஸ்காரத்தினாலும், கேள்வியினாலும், சேவையினாலும் தத்வத்தை அறிந்து கொள். தத்வத்தை அறிந்த ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.)
ஒருவன் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால், அவன் உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும்.
“பரோபக்ருதிசூன்யஸ்ய ஜீவிதம்”
பரோபகாரம் செய்யாத மனிதனுடைய வாழ்க்கை வீண். அதேசமயம்,
“ஜீவந்து பசவோ யேஷாம் சர்மாப்யுபகரிஷ்யதி”
பிராணிகள் வாழட்டும். சாவிற்குப் பிறகு கூட அவை தமது தோல்களின் மூலமாக மற்றவர்களுக்குப் பயன்படுகின்றன.
இத்தகைய முக்கியமான இடம் பரோபகாரத்திற்குத் தரப்பட்டுள்ளது. அதனால்தான் கடவுள் முதலில் மனித குலத்தின் நலனுக்காக வேதங்களை உபதேசித்து, தாமே அவதரித்து முனிவர்களைத் தர்ம சாஸ்திரம் எழுதுமாறு செய்தார். அக்ஞானமாகிற காட்டில் அகப்பட்டுக் கொண்டு, ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயில் அவதியுறுகிற மக்களுக்கு, தமது உபதேசங்கள் உகந்த முறையில் உள்ளன என்று தோன்றுவதற்காக மனித அவதாரம் பெற்றார்.
ஆகவே தக்ஷிணாமூர்த்தி, தமது மௌனத்தையும் தமது இருப்பிடமான கல்லால மரத்தடியையும் விட்டு விட்டு உலகில் சங்கராச்சார்யாள் வடிவில் வந்தார். சங்கராச்சார்யாளின் உபதேசங்களைக் கேட்கும்போது நாம் சந்திரனைத் தொட்டது போன்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதுபோல அவரது பரம்பரையில் வந்த குருநாதர் ஒருவரைப் பார்க்கும் போது சங்கராச்சார்யாளையே பார்த்தாற் போல எண்ணுகிறோம். அதனால் தான் மாதவீய சங்கர விஜய சுலோகத்தில்,
“சரதி புவனே சங்கராச்சார்ய ரூபா”
(சங்கராச்சார்யாள் வடிவில் உலகில் சஞ்சாரிக்கிறார்) என்று கூறப்பட்டது.
“அசரத்” (சஞ்சரித்தார்) என்று கூறப்படவில்லை. அவர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு இத்தகைய மனோபாவமும், பக்தியும் இருப்பதால்தான் குருபரம்பரை வந்திருக்கிறது. “சங்கராச்சார்யாள் வந்து போய்விட்டார்” என்ற கருத்து இருந்தால், சங்கராச்சார்யாளின் மடங்கள் நிலைத்திருக்க மாட்டா. நீங்கள் தான் உங்களுடைய மனோபாவத்தினால் மடங்களைக் காத்துக் கொண்டிருகிறீர்கள். எனது குருநாதர் இந்த வடிவத்தில்தான் நமக்கு அளிக்கப்பட்டார்.
(ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள், தனக்குக் குருநாதராக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளைப் பற்றி “எனது குருநாதர்” என்ற தலைப்பில் 1987ம் ஆண்டு பெங்களூரில் ஏழு நாட்கள் நடைபெற்ற “ஸ்மரண ஸப்தாஹம்” என்ற விழாவில் ஆற்றிய உரையில் இருந்து பகிரப்பட்டது)
ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வமிகளை தரிசனம் செய்வதற்காக எனக்கு நெருங்கிய நண்பரும், ஆசார்யாளின் தீவிர, சீடருமான திரு. ஜெ. சு. பத்மநாபன் அவர்கள் சிருங்கேரிக்குச் சென்றிருந்தார். அவர் அடிக்கடி குருநாதரை தரிசித்துவரும் பக்தர் கூட்டத்தில் ஒருவர். அப்படி ஒருமுறை அவர் துங்கை நதிக்குத் தென்புறத்தில் நரசிம்மவனத்தில் இருக்கும் குருநிவாஸ் பூஜா மண்டபத்தில் ஆசார்யாளின் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் பக்தர்களின் நீண்ட வரிசையில் நின்றுகொண்டார்.
அவரது முறை வந்தது. ஆசார்யாளை வந்தனம் செய்து,” ஆசார்யாள் தமிழ் நாட்டிற்கு விஜயயாத்திரை செய்து பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்ய வேண்டும் என்று மிக்கப் பணிவோடு வேண்டிக் கொண்டார். உடனே ஆசார்யாள், ” அப்படியா…நீங்கள் இங்க வந்து என்பக்கத்துல கொஞ்ச நேரம் நில்லுங்கோ” என்று கனிவோடு சொல்ல, திரு. பத்மநாபனும் அருகில் சென்று நின்று கொண்டார்.
பக்தர்களுக்கான தரிசனம் முடிந்தவுடன் ஆசார்யாள் திரு. பத்மநாபனை அழைத்து,” நீங்கள் இத்தனை நேரம் இங்கே நின்று கொண்டு, தரிசனம் செய்த பக்தர்களைப் பார்த்துக் கொண்டிருந்தீர். இப்ப நான் ஒரு கேள்வி கேட்கறேன் அதுக்கு நீங்க பதில் சொல்லுங்கோ… அப்பறம் விஜய யாத்திரையைக்கு வருகிறேன்” என்றார்.
“….எனக்குத் தெரிஞ்சாச் சொல்லறேன்” என்று பத்மநாபன் சொன்னதும், “இங்கே நீங்கள் இவ்வளவு நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தீர். எல்லோருமே எனக்கு அது வேணும், இதுவேணும் ஆசார்யாள் அனுகிரஹம் பண்ணுங்கோன்னு கேட்டார்களே தவிர, யாராவது ஒருத்தர் “ஆசார்யாள் எனக்கு ஆத்ம விசாரம் பண்ணற ஞானம் வரணும், அதுக்கு எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கோ என்று கேட்டார்களா? ஒவ்வொரு முறையும் விஜய யாத்திரை செய்யும் பொழுதும் சந்தியா வந்தனம் பண்ணுங்கோன்னு சொல்லறோம். அது காதுல விழ மாட்டேங்கறது. நேரமில்லைன்னு சொல்லறா ….” என்றார் ஆசார்யாள்.
“ஆசார்யாள்…இதுக்கு என்கிட்ட பதில் இல்லை… ஆனா நீங்க விஜய யாத்திரை வந்தா ஆயிரத்துல பத்து பேராவது சந்தியாவந்தனம் பண்ணுவா.. .குருவின் சொல்படி நடப்பா…” என்று பத்மநாபன் சொன்னதும்,” அதுக்காகத்தானே ஆசார்யாள் எல்லாம் தொடர்ந்து விஜயயாத்திரை பண்ணிண்டே இருக்கா… தர்மப் பிரசாரம் பண்ணிண்டே இருக்கா” என்று குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் சொன்ன விபரத்தை எனக்கு நண்பர் திரு. ஜெ.சு. பத்மநாபன் பகிர்ந்து கொண்டு, ” ஆசார்யாளுக்கு சிஷ்யாபேர்ல இருக்கிற கருணைக்கு எல்லையே இல்லை…” என்றார்.
(வித்யையும் விநயமும் தொடரும் – 20.05.2020)