நீ ஒருவர்க்கும் விரோதி இல்லை. நீ புக்குத் திருவடி தொழு என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது …
உனக்கென்ன வேறுடையை – மூவாயிரப்படி. எல்லே இளங்கிளியே பாசுரத்தில், ஒரு பெண்பிள்ளை தான் மட்டும் தனியாக எம்பெருமானை அனுபவிக்கலாமா என்னும் பொருள்பட .. உனக்கென்ன வேறுடையை.. என்பதற்கு இங்கு ஸ்ரீ கூரத்தாழ்வான் வார்த்தை நினைக்கத் தக்கது.
கிருமிகண்ட சோழனின் துன்புறுத்தலால் ஆழ்வான் கண்ணிழந்து, ஆனாலும் ஸ்ரீ நாராயண பரத்துவத்தை நிலைநாட்டினார். எம்பெருமானாரும் மேல்நாட்டுக்கு எழுந்தருளி இருந்த காலத்தில், கோபமடைந்த சோழ அரசன் ஸ்ரீ ராமானுஜ ஸம்பந்தம் பெற்ற எவரையும் திருவரங்கம் கோவிலில் நுழைய தடை விதித்தான்.
ஆழ்வான் பெருமாளை சேவிக்கச் சென்ற போது, நீர் ராமானுஜருடைய சிஷ்யர் ஆனாலும், நீர் யாருக்கும் விரோதி இல்லை. அதனால், நீர் சென்று சேவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தாலும்… ஆழ்வான், தான் விரோதி இல்லை, யாருக்கும் துன்பம் விளைக்காதவர் என்று பெருமாளை சேவிக்க இயன்றாலும் தம் ஆசார்ய சம்பந்தம் அடியாக அன்றோ இது அமைய வேண்டும். அதனால், ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் என்றே தன்னைக் கருதிக் கொண்டு கோவுலுக்குச் செல்லாமல் இருக்கிறேன் என்றாராம்..
இங்கு ஆசார்ய ஸம்பந்தம் எம்பெருமான் ஸம்பந்தத்தை விட உகந்தது, எம்பெருமானை கூடி இருந்து குளிருதல், சூழ்ந்திருந்து ஏத்துதல் சாலச் சிறந்ததாம்.
- வானமாமலை பத்மனாபன்