தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கும் இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளைப் பின்பற்றி 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்திருக்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.
இந்தியாவில் அந்த மசோதாவை மகாராஷ்டிர மாநிலம் முதலில் அமல்படுத்தியது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதிவரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அரசுக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.
அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது! பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் இயங்கலாம்.