மலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் கைதி ஒருவரிடம் போலீசார் கொடூரமான முறையில் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கைதியின் கை கால்களை கட்டி அவரது கழுத்தில் மலைப் பாம்பை ஏற விட்டு அவரை அச்சுறுத்தி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளனர். இதனால் இது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கைதி செல்போன் திருடியுள்ளதால், அவரை கைது செய்து கை கால்களை கட்டி அவரது கழுத்தில் மலைப் பாம்பை ஏற வைத்து, அவரது உடலைச் சுற்றி நெருக்க வைத்து, பாம்பு அவரைக் கடிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அந்தக் கைதி பயந்து அலறினார். அவரிடம் போலீசார் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல் விசாரணை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு இந்தோனேசிய காவல்துறை தனது வருத்தத்தைத் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மேலும் இனவெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இம்மாதிரியான அச்சுறுத்தல் முறையில் விசாரணை நடத்துவது முதல்முறையல்ல எனவும் ஏற்கெனவே சில கைதிகளை இது போன்று விசாரணை செய்திருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.