இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 2 பாக் விமானங்கள் குண்டு வீசிவிட்டு பறந்தன! அந்த விமானங்களை இந்திய விமானங்கள் வழி மறித்து தாக்கின!
இதனிடையே வெளியுறவுத் துறை ஒரு மிக் விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளதாகவும், ஒரு விமானி திரும்பவில்லை என்றும், அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும், இன்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு செயலாளர், உளவுத்துறை அதிகாரிகள், முப்படை தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
போர் விமானங்களை எந்த நேரத்திலும் இயக்க தயாராக இருக்கும்படி விமானப் படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அருண் ஜேட்லி இன்றைய செய்தியாளர் சந்திப்பில், எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறோம் என்றும், அமெரிக்கா பின்லேடனைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்தது போன்று, இந்தியாவும் செய்ய இயலும் என்று கூறிய கருத்து, போர்ச் சூழலை உறுதி செய்யும் விதமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்!