‘இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்’ எனும் பயணத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் ரயில் சேவையாக ரயில் பயணிகளை மகிழ்விக்க உலகிலேயே பழைமையான நீராவி இன்ஜின்மூலம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே ஹெரிடேஜ் ரயில் இயக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில், கடந்த 1855-ல் ஈஸ்ட் இண்டியன் கம்பெனியின் கிட்சன் தாம்சன் மற்றும் ஹெவிட்சன் ஆகியோரால் ஈ.ஐ.ஆர்., 21 என்ற நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் நீராவி இன்ஜின்மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. இங்கிலாந்து விக்டோரியா மகாராணி, நீராவி இன்ஜின் ரயில்களில் இந்தியாவில் பயணம்செய்தார். இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் சேவையில் நீராவி இன்ஜின் ஈடுபடுத்தப்பட்டது.
அதன்பிறகு, பயணிகள் சேவையை நிறைவுசெய்த நீராவி இன்ஜின் ஹவுரா மற்றும் ஜமால்பூர் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த 1964-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்த ரயில்வே வழித்தடத்திலும் இயக்கப்படவில்லை.
இந்திய ரயில்வே, இந்த இன்ஜின்களைக் கடந்த 2014-ம் ஆண்டு குடியரசு, சுதந்திர தினங்களில் பயணிகளைக் கவரும் வகையிலும், பாரம்பர்யத்தைப் பேணும் வகையிலும் குறிப்பிட்ட தூரம் மட்டும் இயக்கப்பட்டது.
பின்னர், தெற்கு ரயில்வே கடந்த 2010-ம் ஆண்டு சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனையில் நிறுத்திப் பராமரித்தது. அதன் பின்னர், தெற்கு ரயில்வே சார்பில் ‘பாரம்பரிய சேவை’ என்ற பெயரில், குறிப்பிட்ட ஊர்களில் நீராவி இன்ஜின்மூலம் ஒரு பெட்டியுடன் இயக்கப்பட்டன. இதில், 35 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்’ எனும் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே இயக்கிட முடிவுசெய்யப்பட்டு, கடந்த நவம்பர் 9-ம் தேதி திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த ஹெரிடேஜ் ரயில், இன்று 35 பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டத்திற்கு இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஷா கொடியைத்து இயக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இந்த நீராவி இன்ஜின், கடந்த 1857ல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது. அதன்பிறகு இந்த இன்ஜின், ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டது. அங்கு, இந்த இன்ஜின் ரயிலின் பாகங்கள் காணாமல் போனதால் சிதிலமடைந்தது. இந்த நீராவி இன்ஜின், பழைமையைப் போற்றும் வகையில் அதை 2010ம் ஆண்டு பெரம்பூர் பணிமனைக்குக் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது.
பராமரிக்கப்பட்ட நீராவி இன்ஜின்மூலம் எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே 10 கி.மீ தூரத்திற்கு இயக்கப்பட்டது.
அதன்பிறகு, புதுச்சேரி – சின்னபாபுசமுத்திரம் இடையே 17 கி.மீ வரை இயக்கப்பட்டது. தற்போது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே 33 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படுகிறது. வரும் 21-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு நாள்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். ரயில் கிளம்பும்போது பயணிகள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்..
Leave a Reply